எவர் தவறிழைத்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், பாரிய ஊழல், மோசடிகள் தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்சாக்களுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்ட கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எவராக இருந்தாலும் குற்றமிழைத்தவர்களுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது. அதுவே நல்லாட்சியின் அம்சமாகும். எனது கருத்தும் இதுவாகத்தான் இருக்கின்றது.
சிறு, சிறு குற்றங்கள் தொடர்பில் துரித விசாரணை இடம்பெற்றாலும், பாரிய மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஸ்தம்பித்த நிலையிலேயே இடம்பெற்று வருகின்றன. இவை துரிதப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு விசாரணை நடத்திய பின்னர் குற்றமிழைத்திருந்தால் தண்டனை வழங்கலாம். நிரபராதியானால் விடுதலை செய்யலாம். இதை விரைவாக செய்ய வேண்டும்.
அவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை. இதனால்தான், சட்டமா அதிபர் திணைக்களத்தையும், பொலிஸ் திணைக்களத்தையும் தனக்குக் கீழ் 3 மாதங்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி கேட்டார். அவ்வாறு வழங்கினால் அவரால் செய்யக்கூடியதாக இருக்கும்.
அதேவேளை, பிணைமுறை மோசடி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு நடத்தி வரும் விசாரணைகளில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. அறிக்கை வெளிவந்ததும் ஜனாதிபதி அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பார் என்றார்.