இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையென தெரிவித்து, யாழ். பல்கலைக்கழகத்தில் கதவடைப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இப் போராட்டம் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனால், பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் காணப்படாத நிலையில், வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சம்பந்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் கடந்த 35 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி, அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்தனர். இதன்போது, விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த போதும், எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்தே இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.