விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் போரைக் கற்றுக்கொண்டோம். பிரபாகரன் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்சல் உருவாகினார் என்று பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார். |
நாடாளுமன்றத்தில் நேற்றுச் 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “ தற்போதுள்ள பலமான இராணுவம் அப்போது இருந்திருந்தால் இரு ஆண்டுகளில் போரை முடித்திருக்க முடிந்திருக்கும். போர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக படையினர் பலர் உயிரை தியாகம் செய்தனர். இதனால் நாம் கவலை கொள்ள மாட்டோம். பாதுகாப்புப் படையினருக்குள்ள தலையாய பொறுப்பு அரசமைப்பை பாதுகாப்பதாகும். அவர்கள் அதற்கு முன்னின்று செயற்படுவர். முப்பது வருடம் போர் இருந்தது. அப்போது நாட்டில் பாதுகாப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. போரை வெல்லப் பெரும் சேவைகளை முன்னெடுத்தோம். பாதுகாப்புப் படைகளில் 95 வீதம் தேசப்பற்றுள்ளவர்கள் இருந்தனர். 5 வீதத்தினர் நாட்டைப் பற்றிச் சிந்திக்காமல் சில குழுக்களின் பின்னால் பணத்திற்காகச் செயற்பட்டனர். போரில் 30 ஆயிரம் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். அதில் 28 ஆயிரம் பேர் தரைப்படையினராவர். 3,000 பேர் ஊனமுற்றனர். இந்த ஒட்டு மொத்த படையினரின் உதவிகள் இன்றி எம்மால் வெற்றியடைந்திருக்க முடியாது. போரின்போது பாதுகாப்புப் படையில் 3 லட்சம் படையினர் இருந்தனர். அதில் 2 லட்சம் பேருக்கு நானே தலைமை வகித்தேன். இராணுவத்திற்கு பன்னாட்டுத் தரம்வாய்ந்த பாதுகாப்புச் செயல்முறைத் திட்டம் இல்லை. பாதுகாப்புத் திட்டமில்லை. படையினருக்குப் பயிற்சி வழங்கவேண்டும். எதிர்காலத்தில் நாட்டுக்குள் பிரச்சினைகள் வரலாம். தற்போது படையினருக்கு உரிய இடம் வழங்க வேண்டும். கடந்த காலங்களை விடவும் பாதுகாப்புக்கு ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. முன்னைய ஆட்சியில் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கிடுவதனை விடுத்து அதற்குப் பதிலாக கொள்ளையிட்டனர். கடற்படையின் பணத்தை அவன்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கினர். ரத்னாலங்க போன்ற நிறுவனத்தினால் அப்போதைய பாதுகாப்புச் செயலர் வியாபாரம் செய்து ஊழல் செய்தார். இதுபோன்ற அனைத்துக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்கவேண்டும். குடும்ப அரசியல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். தற்போது வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றப் போவதாக கூறுகின்றனர். வடக்கும் கிழக்கு தெற்கிலும் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமாகும். எங்கு இராணுவம் இருக்கவேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும். இராணுவத்தை பலவீனப்படுத்த நாம் முனையவில்லை. நாடுமுழுவதும் இராணுவ முகாம்கள் இருக்கும். இராணுவத்தினர் என்ற வகையில் எமக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. எனினும் அமெரிக்க இராணுவத் தளபதி இங்கு நடக்கும் மாநாடொன்று தலைமை அதிதியாக வருகின்றார். இதனை இப்படியே விட்டுச் சும்மா இருக்கமுடியாது.இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்டாள் தனமாக பேசிக் கொண்டிருப்பதில் பயன் இல்லை. இராணுவத் தளபதி குற்றம் செய்திருந்தால் அதுதொடர்பில் விசாரணை செய்யவேண்டும். அதனை விடுத்து முட்டாள் தனமாக பேசி கொண்டிருப்பதனால் எம்மால் நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது – என்றார். |
பிரபாகரனிடமே போரைக் கற்றுக்கொண்டோம்! - சரத் பொன்சேகா
Add Comments