வவுனியா வடக்கில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுவரும் சிங்கள மக்களிற்கான வசதி வாய்ப்புக்களினை ஏற்படுத்தி வழங்குவதில் மைத்திரி –ரணில் அரசு மும்முரமாக இருந்துவருகின்றது. 2009 யுத்த முடிவின் பின்னர் மீள்குடியேறி எட்டுவருடங்களுக்கு மேலாக போக்குவரத்து வசதியின்றி குன்றும் குழியுமான பாதையில் 16கிலோ மீற்றரிற்கு மேல் தமிழ் மக்கள் பயணிக்கும் துன்பம் தொடர்கின்றது.குறிப்பாக வெவைத்த கல்லு கிராமம் சிங்கள குடியேற்ற கிராமங்களை அண்மித்துள்ள போதும் அரனால் தமிழ் மக்கள் மட்டும் கண்டுகொள்ளப்படாதிருக்கின்றனர். இதே கிராமசேவகர் பிரிவுடன் எல்லை நிர்ணயக்குழு மூலம் இந்த வருட ஆரம்பத்தில் இணைக்கப்பட்ட மூன்று சிங்களக்கிராமங்களுக்கு காப்பற் வீதி ஒதியமலையூடாக அமைக்கப்பட்டு அவ்வேலைகள் முடிவுறும் தறுவாயில் உள்ளது.
நெடுங்கேணி ஒலுமடுவீதியில் ராணுவ முகாமிற்கு முன்பாக செல்லும் வீதியே அவசர அவசர அமைக்கப்பட்டுவருகின்றது.
முந்திய அரசிற்கு குறைவில்லாது தமிழ் மக்களது காணிகளை சுவீகரிக்கவும் அப்பகுதிகளில் வசதி வாய்ப்புக்களினை ஏற்படுத்தி வழங்கி சிங்கள குடியேற்றங்களை முன்னெடுப்பதும் தற்போது வேகம் பெற்றிருக்கின்றது.
இதனிடையே தற்போதைய அரசிற்கு முண்டுகொடுக்கும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் சொந்த கிராமமான வட்டக்கச்சியில் பல குடும்பங்கள் கோழிகளை வளர்க்கும் கூடுகளினுள் வாழ்வதை கிளிநொச்சி ஊடகவியலாளர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட வட்டக்கச்சி புதுக்காடு மாவடி அம்மன் என்னும் கிராமம் யுத்தங்கள் முடிவுற்ற பின்னர் வவுனியா செட்டிக்குளம் முகாமில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் தங்களின் இடத்திற்கு மீள்குயேறினார்கள். அன்றுதொடக்கம் இன்று வரைக்கும் எந்தவொரு அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சிலருக்கு சாயிபாபா அமைப்பினால் கோழிக்கூடுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த கோழிகூட்டில்தான் அவர்கள் குடியிருக்கிறார்கள்.
நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக நிவரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிவாரணத்துக்குறிய டோக்கனுக்கு 120 ரூபா வழங்கினால்தான் டோக்கன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த மக்கள் அன்று வேலைக்கு சென்றால்தான் அவர்களின் அடுப்பு எரியும் இவ்வாறு இருக்கும் கிராம மக்களை ஏன் வதைக்கிறார்கள் என்று தெரியவில்லையென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒருபுறம் சிங்கள மக்களை தமிழ் மக்களது காணிகளில் குடியேற்ற முனைப்பு காட்டும் ரணில் -மைத்திரி அரசு மறுபுறம் சொந்த மண்ணில் குடியேறிய தமிழ் குடும்பங்களை கண்டுகொள்ளாதேயிருந்து வருகின்றது.