திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவிடமும், வடக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சுவாமிநாதனிடமும், வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடமும், ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“வடக்கில் நெடுஞ்சாலை வலைப்பின்னல் ஒன்று உருவாக்கப்படும். கண்டியில் இருந்து திருகோணமலைக்கு நெடுஞ்சாலை அமைக்கப்படும்.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று இணங்கியுள்ளது.
திருகோணமலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியினால், திருகோணமலையைச் சுற்றியுள்ள, வவுனியா உள்ளிட்ட பகுதிகளும் அபிவிருத்தியடையும்.
திருகோணமலையில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் Lவேலைகளுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பொறுப்பாக இருப்பார்.
வன்னி அபிவிருத்தி வேலைகளுக்கு றிசாத் பதியுதீனும், வடக்கு அபிவிருத்தி வேலைகளுக்கு சுவாமிநாதனும் பொறுப்பாக இருப்பார்கள்.
மாங்குளத்தில் கைத்தொழில் வலயம் ஒன்று உருவாக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.