வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிடும் மக்கள் ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில்,
'தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில்
தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பான
மாபெரும் மக்கள் ஒன்றுகூடல்.
தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது. இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைந்துகொள்வதற்கான வழித்தடம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பிலும், இதில் தமிழ் மக்கள் பேரவையின் வகிபாகம் தொடர்பிலும் சில தீர்மானங்களை மேற்கொள்ளும் மாபெரும் மக்கள் ஒன்றுகூடல் 24.10.2018 (புதன்கிழமை) அன்று காலை 9.30மணிக்கு யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய வடக்கு வீதியில் அமைந்துள்ள நடராஜா பரமேஸ்வரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விசேட உரையாற்றவுள்ளதோடு தனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் தமிழ் மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.
மேற்படி ஒன்றுகூடலுக்கு அரசியல் வேறுபாடுகளைக்கடந்து பொதுமக்கள், பொது அமைப்புக்கள்,தொழில் சங்கங்கள் கல்விச் சமுகத்தினர் மற்றும் இளைஞர்- யுவதிகள், போன்ற அனைத்துத் தரப்பினரையும் கலந்து பங்களிக்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்புவிடுக்கின்றது " - என்றுள்ளது.
Add Comments