பிரித்தானிய நாட்டில் எதிர்வரும் யூன் 8-ம் திகதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போதைய பிரதமரான தெரசா மே அதிரடியாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வேண்டும் என பெரும்பாலான பொதுமக்கள் வாக்களித்தை தொடர்ந்து முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கமெரூனை தொடர்ந்து கன்செர்வேட்டிவ் கட்சியை சார்ந்த தெரசா மே புதிய பிரதமராக பதவியேற்றார்.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய விலகுவது தொடர்பாக விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் யூன் 8-ம் திகதி பொது தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரசா மே அறிவித்துள்ளார்.
‘ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகிய பிறகு இந்நாட்டை வழிநடத்த ஒரு திறமையான தலைமை தேவைப்படுகிறது.
நாடு முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்துவதன் மூலம் ஒரு வலிமையான அரசாங்கம் உருவாகும்’ என தெரசா மே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் எதிர்வரும் 2020-ம் ஆண்டில் தான் பொது தேர்தல் நடைப்பெற வேண்டும். எனினும், தற்போதையை அரசியல் சூழ்நிலைக் காரணமாக முன்னதாகவே பிரதமர் தேர்தல் நடத்த வேண்டும் என அறிவித்துள்ளார்.
பிரதமர் தெரசா மேயின் இந்த அறிவிப்பை முன்னாள் பிரதமரான டேவிட் கமெரூன் வரவேற்றுள்ளார்.
எனினும், பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் நாளை நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் தெரசா மேயிற்கு பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே பொது தேர்தல் நடத்த முடியும்.
தற்போதையை பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சித் தலைவரான கொர்பைன் தெரசா மேயின் அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.