இராணுவத்தினரின் வசமுள்ள மக்களுடைய காணிகளில் உள்ள கட்டடங்களை இராணுவம் இடித்து அழித் துள்ளது என்பதை யாழ்.மாவட்டத்தின் புதிய இராணுவ கட்டளைத் தளபதி
தர்சன ஹெட்டியாராய்ச்சி ஏற்றுக் கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் இருந்த கட்டங்கள் தற்போது இல்லை எனவும் கட்டளைத் தளபதி தன்னிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
புதிதாக பொறுப்பேற்று கொண்ட இராணுவ கட்டளைத் தளபதிக்கும் வட மாகாண முதலமைச்சருக்கும் இடையில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முதலமைச்சர்,
வடக்கு மாகாணத்தின் இராணுவ கட்டளை தளபதி இடமாற்றம் பெற்று சென்றதனை அடுத்து கிழக்கு மாகாணத்திலிருந்து புதிய தளபதி தர்சன ஹெட்டியாராச்சி வந்துள்ளார்.
இவருடன் பேசியதில் பல்வேறு நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக இடம்பெயர்ந்துள்ள மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவதில் துடிப்பாக இருக்கின்றார். எனினும் அவ்வாறு செய்வதற்கு தடைகள் சில இருப்பதாக கூறிய அவர், அந்த தடைகளை நீக்கி மீள்குடியமர்வை மேற்கொள்ள தயாராக இருப்பதாக கூறினார்.
கூடியளவு காணிகள் வடக்கில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் 2015 ஆம் ஆண்டு; காணப்பட்ட கட்டடங்கள் தற்போது காணவில்லை. அவற்றை ஏன் இராணுவத்தினர் இடித்தார்கள் என தெரியவில்லை. அவற்றை விட்டிருக்கலாம். கட்டடங்களை இடித்து தரைமட்டமாக்கியது தனக்கு வரு த்தம் அளிக்கின்றது எனவும் கூறினார். ஆகவே இவர் சற்று வித்தியாசமானவர் போல் தெரிகின்றது. இனி நடக்கப்போவதை பார்ப்போம் என்றார் முதலமைச்சர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்டளைத்தளபதி, முகாம்களில் உள்ள மக்கள் தொடர்பில் தீவிரமான கரிசனை நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம். மேலும் தற்போது யாழில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.