சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக உள்ள ஆண் ஒருவருக்கு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்படாமையால் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
மணற்காடு குடத்தனையைச் சேர்ந்த மருசலின் யோன்சன் ஹெனடிற் (வயது-44) என்ற மாற் றுத்திறனாளியான நபர் கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.00 மணியளவில் உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மறுநாள் காலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்மரணம் தொடர்பில் பருத் தித்துறை நீதிமன்றின் கட்டளைக்கிணங்க பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணையினை மேற்கொண்டார்.அப்போதே இரவு அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை எதுவும் வழங்கப்படவில்லை என்ற உண்மை உறவினர்களினால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மாற்றுத் திறனாளியான நபரை வைத்தியசாலை தரப்பினர் நடத்தியே விடுதிக்கு அழைத்து சென்றதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். நேற்று மதியம் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க யாழ்.போதனா வைத்தியசாலையில் உள்ள சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையினை மேற்கொண்டார்.
இதில் குடல் அடைப்பு, சளி, கிருமித் தொற்று என்பன வயிற்றில் காணப்பட்டதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான நபருக்கு வைத்தியசாலை தரப்பினர் சிகிச்சை வழங்கவில்லை என்பது தெரிவிக்கப்பட்டதன் மூலம் அங்கு இது போன்ற பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் இவ் விசாரணை அறிக்கை பருத்தித்துறை நீதிமன்றில் பாரப்படுத்தப்படவுள்ளது என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.