ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன இருந்த போது, தனியார்க் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படுமென்று எழுத்து மூலமான வாக்குறுதியளித்திருந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி தேர்தலின் போது எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படாது மைத்திரிக்கு ஆதரவளித்தமை தொடர்பினில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்ற நிலையினில் இரண்டரை வருடங்களின் பின்னராக சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும் வடக்கினில் தொடர்ந்தும் படையினரது பிரசன்னத்தை பேணவும் அதற்கேதுவாக தனியார் காணிகளை விடுவித்து அரச காணிகளினில் படையினரை குடியமர்த்துவதன் மூலம் தொடர்ந்தும் அதனை பேணவும் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சியாகவே சுமந்திரனின் இந்நடவடிக்கை பார்க்கப்படுகின்றது.
இதனிடையே யாழ். மாவட்டத்தில், வலிவடக்கு உயர்பாதுகாப்பு வலய காணிகளை விடுவிக்கமுடியாதென படைத்தரப்பு ஆணித்தரமாக இன்றைய கூட்டத்தினில் தெரிவித்துவிட்டது.
எனினும் அதனை தவிர்த்து முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொது மக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பில் யாழ். மாவட்ட செயலகத்தில், இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கூடிய அக்கறை செலுத்தப்பட்டிருந்தது.
ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து, அரச காணிகளின் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது. காணிகள் குறித்த விவரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச காணிகள் வழங்கப்படுவதை கூட காணிகளின் பாதுகாப்பு கருதி படையினரிடம் ஒப்படைப்பதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2009 போர் முடிவடைந்த பின்னர் 27 ஆயிரம் ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4 ஆயிரத்து 700 ஏக்கராகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கினில் ஆறு பொதுமகனிற்கு ஒன்று எனும் விகிதாசாரத்தினில் படையினரது பிரசன்னமுள்ளது.யுத்தம் முடிவுக்கு வந்து ஏழுவருடங்களாகின்ற போதும் அதே தொகை படையினரை இலங்கை அரசு பேணிவருகின்றது.படைக்குறைப்பு அல்லது படை வெளியேற்றம் குறித்து தமிழ் மக்கள் குரல் எழுப்பிவருகின்ற நிலையினில் அரச காணிகளை வழங்கி படைமுகாம்களை பேணும் இலங்கை அரசின் முயற்சிறை அமுல்படுத்து சுமந்திரன் பாடுபடுவது இதன் மூலம் அப்பட்டமாக தெளிவாகியுள்ளது.