புதிய தேர்தல் முறையினால் வடக்கு, கிழக்கில் தமிழ்ப் பகுதிகளில் உள்ள மூன்று உள்ளூராட்சி சபைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சபைகளிலும், பிற கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடனேயே ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளில் ஈ.பி.டி.பி.யும், இரண்டு சபைகளில் தமிழ் காங்கிரசும் அதிக ஆசனங்களைப் பெற்றுள்ளன.
எனினும், பூநகரி மற்றும் வெருகல் பிரதேச சபைகளில் மாத்திரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஊர்காவற்றுறையில் ஈ.பி.டி.பி.யும் தனித்து ஆட்சியமைக்கக் கூடிய பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 22 உறுப்பினர்களைக் கொண்ட புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் 11 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ள போதிலும், பெரும்பான்மை இன்றி சமபலநிலையே காணப்படுகிறது.
வட்டார ரீதியாக அதிக ஆசனங்களைக் கைப்பற்றிய போதிலும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், போதிய விகிதாசார ஒதுக்கீட்டு ஆசனங்களைப் பெறாததனால், இந்தநிலை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாநகரசபைகள், மன்னார், வவுனியா, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, திருகோணமலை உள்ளிட்ட நகரசபைகள் மற்றும் ஏனைய பிரதேச சபைகளில், எந்தக் கட்சியும் தனித்து ஆட்சிமைக்கக் கூடிய அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 33 சபைகளிலும், தமிழ் காங்கிரஸ் 2 சபைகளிலும், ஈ.பி.டி.பி. 1 சபையிலும், ஏனைய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளன.
பிறகட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு உள்ளகப் பேச்சுக்கள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.