கோத்தா காணிபிடிப்பு மீண்டும் தடைப்பட்டது?
முல்லைத்தீவு மாவட்டம் பரந்தன் சாலை வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தா கடற்படை முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் எதிர்ப்பினால் அது மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவுப் பகுதியில் வட்டுவாகல் கிராமத்தில் தமிழ்மக்களிற்கு சொந்தமான 469 ஏக்கர் நிலத்தினையும் ஏனைய நிலம் 148 ஏக்கருமாக மொத்தம் 617 ஏக்கர் நிலத்தில் பாரிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த நில உரிமையாளர்களும் இப்பகுதியில் பரம்பரையாக மீன் பிடித்தல் தொழில்மூலம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய குடும்பங்களும் வாழ வழியின்றித் தவிக்கும் நிலையில் குறித்த முகாமை நிரந்தர கடற்படை தளமாக்க காணி சுவீகரிப்பிற்கான நிலஅளவீடு இன்று நடைபெறவுள்ளதாக நில அளவை திணைக்கள அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
எனினும் தமது நிலத்தை கடற்படை முகாமிற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையினை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மீண்டும் நில அளவீட்டை தடுக்கும் வகையில் மக்கள் முற்றுகை போராட்டத்தை கடற்படை தளம் முன்பதாக இன்று மேற்கொண்டிருந்தனர்.
இதனால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளவந்த நில அளவை திணைக்கள அதிகாரிகள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.காவல்துறையினர் போராட்டகாரருடன் பேச்சுக்களை நடத்தியபோதும் அது வெற்றி பெற்றிருக்கவில்லை.
ஏற்கனவே திருகோணமலை,சாலை,காங்கேசன்துறை ,காரைநகரென கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் கோத்தா கடற்படை தளம் தேவையில்லையென மக்கள் வாதிட்டுவருவதுடன் இப்பகுதியிலுள்ள அரச காணி கடற்றொழில் துறைசார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க விடுவிக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இரண்டு தடவைகளாக நில அளவை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சி மக்கள் போராட்டங்களினால் கைவிடப்பட்டிருந்த நிலையில் தற்போது முன்றாவது முயற்சியும் தோல்வியடைந்துள்ளது.
Add Comments