வடமாகாணத்திலுள்ள அரச திணைக்களங்கள், சபைகளுக்கு சிங்களவர்களை நியமிக்கும் நடவடிக்கையில் நல்லாட்சி அரசாங்கம் தீவிரம் காண்பித்துவருகின்றது.
அவ்வகையில் இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்திற்கு 15 சிங்கள மானிவாசிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, சமுர்த்தி அதிகாரசபை, பிரதேசசெயலகங்கள் உட்பட முக்கிய பொறுப்புகளுக்கு சிங்களவர்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர். வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சிற்றூழியர் தொடக்கம் அதிகாரிகள் வரை பெருமளவில் சிங்களவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகளின் மாவட்ட தலைமை பதவிகளுக்கு சிங்களவர்கள் நியமிக்கப்படுவதால் தீர்மானத்தை எடுப்பவர்களாக அவர்களே உள்ளனர். பொதுமக்கள் தமது பிரச்சினைகளை அவர்களிடம் எடுத்துக்கூற முடியாத மொழிப்பிரச்சினை காணப்படுகிறது என யாழ். மாவட்ட பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
சிங்கள அதிகாரிகளுக்கு தமிழ், ஆங்கில மொழிகள் அறவே தெரியாது. வடபகுதி பொதுமக்களுக்கு சிங்களம் தெரியாது. இதனால் பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஏற்கனவே வவுனியா,மன்னார் பகுதிகளில் அரச அதிபர்கள் உள்ளிட்ட உயர்பதவிகளில் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு வந்திருந்தனர்.
தற்போது பாடசாலை உதவியாளர்கள்,மின்மானி வாசிப்பாளர்கள் போன்ற பதவிகளிற்கும் சிங்களவர்கள் சத்தமின்றி நியமிக்கப்பட்டுவருகின்றனர்.