மணிவாசகப் பெருமான் தந்தருளிய திருவாசகம் எனும் தேன் மனிதர்களை வாழ வைக்கும் அருமருந்து.
பொதுவில் தேன் என்பது உயர்வான மருத்துவச் சிறப்புடையது போன்று திருவாசகத் தேன் உள்ளும் புறமும் நம்மைப் பாதுகாக்கவல்லது.
மணிவாசகரால் அருளப்பட்ட திருவாசகத்தை மெய்யுருகிப் படிக்க படிக்க தெய்விகம் வலுப்பெறும்.
அத்தகைய சிறப்புமிக்க திருவாசகத்தை சைவசமயத்தவர்கள் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களும் மனமுருகிப் படித்து தாம் பெற்ற பேரானந்தத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இவ்வாறு மனிதர்களைத் தெய்விகமாக்க வல்ல திருவாசகத்தை கருங்கற்களில் பொறித்து அவற்றைப் படிக்கவும் ஆவணப்படுத்தவும் என நாவற்குழி மண்ணில் திருவாசக அரண் மனையை செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகள் அவர்கள் அமைத்துத் தந்துள்ளார்.
முன்பெல்லாம் தமிழ் மன்னர்கள் சிவாலயங்கள் அமைத்து மக்களை ஆன்மிக நாட்டத்துடன் வழிப்படுத்தினர்.
மன்னர்கள் அமைத்த ஆலயங்கள் என்றவுடன் தஞ்சைப் பெருங்கோயில் இராஜராஜசோழ மன்னனின் நாமத்தை உச்சரிக்கும்.
உலகம் வியந்து போற்றுமளவில் தஞ்சைப் பிரகதிஷ்வரர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதன் பெருமை பேசப்படுகிறது எனும்போது இராஜராஜசோழனின் சிவாலய அமைப்பில், இறையருள் எத்துணை தூரம் வலிமை கொடுத்தது என்பதை நாம் உணர்ந்து கொள்வது கடினமன்று.
ஆனால் இன்று சைவ சமயத்தைப் பாதுகாக்க மன்னர்களும் இல்லை, பரோபகாரிகளும் இல்லை என்று ஏங்கி நிற்கின்ற வேளையில்,
மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் அறுநூற்றுக்கும் மேற்பட்ட திருவாசகத்தை கருங்கல்லில் பொறித்து அதற்கென அரண்மனை அமைத்து அதில் நிலைநிறுத்தி இருப்பதென்பது சாதாரண விடயமன்று.
சுருங்கக்கூறின் அக்காலத்து மன்னர்கள் செய்த சமயப் பணிக்கு ஈடாக - இணையாக கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் அமைத்த திருவாசக அரண்மனையை ஒப்பிட்டுக் கூறுவதே பொருத்துடையது.
அரண்மனையில் இருந்து கொண்டு இட்ட கட்டளையை நிறைவேற்ற நாட்டு மக்கள் காத்திருக்கும்போது, ஆயிரம் கால் மண்டபம் அமைப்பது அரிதன்று.
ஆனால் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள், மணிவாசகர் தந்த திருவாசகத்துக்கு அரண்மனை அமைத்தார் எனும்போது, அதற்குள் இருக்கக்கூடிய தெய்விகத்தின் திர வருளை மனிதரால் உணர்ந்து நெக்குருக முடியுமேயன்றி அதனை வார்த்தையால் தெளிவுபடுத்த முடியாதென்பதே நம் முடிவு.
சூரிய சந்திரர் இருக்கும்வரை நாவற்குழி மண்ணில் நிலைத்திருக்கக்கூடிய திருவாசக அரண்மனையும் தெட்சணாமூர்த்திக்கென திருக்கோயிலும் அமைத்துத் தந்த கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களை என்றும் தமிழ் உலகம் போற்றும்.
கூடவே, அவரின் இந்தப் பணிக்கும் சிந்தனைக்கும் பல வழிகளிலும் உதவியாற்றிய அத்தனை பேரும் இறைவனின் திருவருள் சக்தி கிடைக்கப் பெற்ற மாதவத்தவர்கள் என்பதே உண்மை.