முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொண்டுள்ள சுதந்திரக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை பறிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியில் அங்கம் வகித்து அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து கொண்ட 16 பேரைக் கொண்ட குழுவில் அங்கம் வகிக்கும் எட்டு பேரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் இவ்வாறு பறிக்கப்பட உள்ளன.
சுசில் பிரேமஜயந்த, ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாபா, லக்ஸ்மன் யாபா அபேவர்தன உள்ளிட்ட எட்டு உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகளே பறிக்கப்பட உள்ளன.
இந்த தொகுதிகளுக்கு வேறு புதிய அமைப்பாளர்கள் இன்று நியமிக்கப்பட உள்ளனர்.
அமைப்பாளர்கள் தங்களது பணிகளை உரிய முறையில் செய்யத் தவறியதனால் இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.