அநுராதபுரம் விவேகானந்தா சபைக்குரிய காணியினை சிலர் சட்டவிரோதமாக அபகரித்துள்ளதாக அனுராதபுரம் விவேகானந்தா சபையின் தலைவரும், கதிரேசன் ஆலயத்தின் பிரதம குருக்களுமான பி.ஞானசந்திரன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இந்துமக்கள் அனுபவிக்கின்ற அசௌகரியங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று வவுனியா தமிழ் ஊடக மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “1985 ம்ஆண்டு நடைபெற்ற வன்செயல்களின் பின்னர் 2000ஆம் ஆண்டு விவேகானந்தா சபையை அனுராதபுரத்தில் மீண்டும் நாம் ஆரம்பித்திருந்தோம்.
அந்தவகையில் அநுராதபுரம் விவேகானந்தா சபைக்கு ஒதுக்கபட்ட காணியை சண்முகம் சிவஞானம் என்பவர் சட்டவிரோதமான முறையில் அரச அதிகாரிகளை பிழையாக வழிநடத்தி, காணிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளார்.
குறித்த காணியானது 2006ம் ஆண்டளவில் சண்முகம் சிவஞானம் என்பவருக்கு வியாபாரம் நடத்துவதற்காக உடன்படிக்கை செய்யப்பட்டு விவேகானந்த சபையால் வழங்கபட்டிருந்தது.
எனினும் 2011ம் ஆண்டு குறித்த காணியினை போலியான முறையில் தனக்கு சொந்தமாக்கி நீண்டகால அனுமதிப்பத்திரத்தை அவர் பெற்றுள்ளார்.
எனவே விவேகானந்தா சபைக்கு சொந்தமான காணியினை மீட்டுத்தருவதுடன், இதில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகளை வெளிப்படுத்தி உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என உரியதரப்புகளை கேட்டுகொள்கின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.