வடபுலத்தில் விவசாயப்பண்ணைகள்,உணவகம்,விடுதிகள் மற்றும் முடிதிருத்தகமன கடைவிரித்துள்ள இலங்கை ஆக்கிரமிப்பு இராணுவம் தற்போது கட்டடப்பொருள் வர்த்தக்கத்திலும் களமிறங்கியுள்ளது.
முல்லைத்தீவு, முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள படைத்தலைமையகத்தில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் வீடு கட்டுவதற்குப் பயன்படும் சீமெந்து கற்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இராணுவ முகாமிற்கு வெளியே காணப்படும் விளம்பரப்பலகையில் இவ்விடயம் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொலைபெசி வாயிலாக தொடர்புகொண்டு ஓடர்செய்து கற்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் மக்கள் செய்துவரும் பல்வேறு தொழில்களையும் இராணுவத்தினர் செய்துவருகின்றனர். விவசாயம், பால் பதனிடும் நிலையம், மீன்பிடி, சிறு ணவகம், பெரியளவிலான ஹோட்டல் ஆகிய தொழிற்துறைகளை இராணுவம் ஏற்கனவே நடத்தி வருகின்றது.
இந்நிலையில் மக்களின் குடிசைக் கைத்தொழிலாக இருந்து வரும் கற்கள் செய்து விற்பனை செய்யும் தொழிலையும் இராணுவம் கையிலெடுத்திருக்கின்றது.
மக்களது வாழ்வியலை குழப்புக்கின்ற நடவடிக்கைகளில் படையினர் தலையிடப்போவதில்லையெனவும் விவசாயப்பண்ணைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை படைத்தரப்பு மூடி விடுமென்ற இராணுவத்தளபதியின் அறிவிப்பு கிடப்பிலிருக்க புதிது புதிதாக படையினர் தொழில்களில் குதித்துவருகின்றனர்.