“எமது சமூகத்தின் முக்கிய பொறுப்புக்கள் இரு விக்னேஸ்வரன்களின் கைகளில்”: நல்லை ஆதீனம்


வடக்கின் முக்கிய பதவிகளை வகிக்கும் 2 விக்னேஸ்வரன்களும் தங்களது கடமையைச் சரியாகவும் நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். எமது சமூகத்தின் முக்கியமான பொறுப்புக்கள் உங்கள் இருவரின் கைகளில் தான் உள்ளன என நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமசாரிய சுவாமிகள் தெரிவித்தார்.



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 8ஆவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.விக்னேஸ்வரனுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் பேராசிரியர் வ.மகேஸ்வரன் தலைமையில் பாராட்டு விழா இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு ஆசிச்செய்தி வழங்குகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லை ஆதீன குருமுதல்வர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ‘வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் இருக்கின்றார். அதேபோல், வடக்கு மாகாண மக்களின் கல்விச் சொத்தான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக ஆர்.விக்னேஸ்வரன் இருக்கின்றார். இரண்டு பதவிகளுமே தமிழ் மக்களுக்கு முக்கிய விடயமாகும். ஆகவே, இரண்டு விக்னேஸ்வரன்களும் தமிழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் வகையில் தமது பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக செயற்பாட்டை பன்நாட்டு சமூகம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முக்கியமான கட்டத்தில் இருக்கின்றது. அதனைச் சீரான பாதையில் பயணிக்க வைக்க வேண்டிய பொறுப்பை புதிய துணைவேந்தர் பொறுப்பேற்றுள்ளார். அதனை அவர் சிறப்பாக செய்து முடிக்க இறைவன் அவருக்கு அருள் புரிவாராக’ என்றார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila