வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடத்திய கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்க அனுமதிக்கப்படாமல் வெளியே விரட்டப்பட்டனர்.
வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் இன்று காலை 10 மணிக்கு மன்னார் மாவட்ட செயலகத்திற்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ள இருந்தார். மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மன்னார் , நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலர்கள் என அனைவருக்கும் குறித்த நேரத்திற்கு சமூகம் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வருகை தருவதாக இருந்த போதும், நீண்ட நேரத்தின் பின்னரே அவர் வருகை தந்தார். இந்த நிலையில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது. இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் அங்கே சமூகமளித்திருந்தனர்.
அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை இடம்பெற்றபோது ஆளுனருடன் வருகை தந்த பிரத்தியேக செயலாளர் என கூறப்படுபவரினால் ஊடகவியலாளர்களை மண்டபத்தில் இருந்து வெளியில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.
குறித்த செயலாளர் ஆளுனரின் பாதுகாப்பு பிரிவினரை வைத்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் ஊடகவியலாளர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
Add Comments