விசாரணைக்குழுவின் பொய்களை அம்பலப்படுத்திய அரியரத்தினம்!

sritharannariyaratnam

வடமாகாண அமைச்சர்கள்மீதான விசாரணைக்குழு தான் கூறாத பல விடயங்களைத் தான் கூறியதாகப் பதிவுசெய்து அதில் தனது பெயரைப் பயன்படுத்திப்  பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசக் கிளையின் வருடாந்த மாநாடும், புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று மாலை 3.00 மணியளவில் பளை சந்தைக்கட்டிடத் தொகுதியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.  இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் அரியரத்தினம் தெரிவித்ததாவது,
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து எம்மை எதுவித கருத்தும் கூறக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுறுத்தல்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. நான் இது குறித்து கருத்துக் கூறமுடியாத நிலையிலுள்ளேன்.
ஆனாலும் கல்வி அமைச்சர் குருகுலராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நான் முன்வைத்துள்ளதாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பான பொய்.
நான் இப்படியான குற்றச்சாட்டை அந்த விசாரணைக்குழுவிடம் வழங்கவில்லை இது உண்மைக்குப் புறம்பான என்மீது பழிசுமத்துவதற்கானதாகவே நான் கூறுகின்றேன்.
கல்வி அமைச்சர் குருகுலராசாவுக்கு எதிராக நான் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிச் செல்கின்றேன்.
விசாரணைக்குழு எனது பெயரை நான் கூறாத விடயங்களைக் கூறியதாகச் சுட்டிக்காட்டியுள்ளமையானது என்மீது சேறு பூசி எனக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவே நான் கருதுகின்றேன்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டது ஒரு குற்றச்சாட்டாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றி எங்களை வாய்திறக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் இது பற்றி இதற்கு மேல் நான் கூற விரும்பவில்லை.
வடமாகாண அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் விசாரணைக்குழு சரியாகச் செயற்பட்டுள்ளதா? வேண்டுமென்றே வடமாகாண அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
வடமாகாண சபை உறுப்பினரது பெயரைக் குறிப்பிட்டு தான் கூறாத விடயங்களை விசாரணைக்குழுவின் அறிக்கையில் சேர்த்துள்ளதுள்ளமையிலிருந்தே இந்த விசாரணைக் குழு மீது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுகின்றமையும் இக்குழு தமிழ் மக்களைக் குழப்பத்தில் உறைய வைத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டும் உண்மைக்குப் புறம்பான பல விடயங்களைக் குறிப்பிட்டும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
வடமாகாண அமைச்சர்களைப் பதவி விலக வேண்டும் என விசாரணைக்குழு வலியுறுத்துவதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.
வடமாகாண அமைச்சர்களைப் பதவி விலக்குவதற்காக விசாரணைக்குழு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீதியான முறையில் அணுகி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யான உண்மைக்குப் புறம்பானவை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila