வவுனியா பேருந்து நிலையத்தில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள இ.போ.ச ஊழியர்களை கைது செய்வதாக கூறி பொலிஸார் அச்சுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், இன்றைய தினம்(30) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும், வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த 28ஆம் திகதி தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின் ஏழு சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய தினம்(30) காலை வவுனியா மத்திய பேருந்து நிலையத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி, பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த இ.போ.ச ஊழியர்களை அழைத்து மத்திய பேருந்து நிலையத்திற்கு வருகின்ற பேருந்துகளை உள்ளே வர தடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
இதற்கு பதிலளித்த இ.போ.ச ஊழியர்கள் மத்திய பேருந்து நிலையத்தினுள் வருகின்ற பேருந்துகளை நாங்கள் தடுக்கவில்லை.
எங்களது பணிப்புறக்கணிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவூட்டுகின்றோம். அதற்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பேருந்து நிலையத்தில் அமந்திருந்த அனைத்து இ.போ.ச ஊழியர்களையும் அழைத்து இவர்களின் அடையாள அட்டையினை பதியுமாறு கோரியதுடன், இவ்விடத்தில் நின்றால் உங்களை கைது செய்வேன் எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, தற்போது எங்களது தேவைக்கு கூட பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளதாக பொலிஸாரின் அச்சுறுத்தலுக்குள்ளான இ.போ.ச ஊழியரொருவர் கூறியுள்ளார்.