தேசத்தின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 30ஆம் ஆண்டு நினைவுதினம், பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவு தூபிக்கு அருகே குறித்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
அன்னை பூபதியின் பிள்ளைகளின் ஏற்பாட்டில் இன்றைய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்த நிலையில், அன்னை பூபதியின் சகோதரி கண்ணமுத்து பிள்ளையம்மா, அன்னையின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றினார்.
அதனைத் தொடர்ந்து அவரின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. இணைப்பாளர் த.சுரேஸ், மட்டு. மாநகர சபை மேஜர் சரவணபவன், ஜக்கிய தேசிய கட்சியின் மட்டு. மாவட்ட இணைப்பாளர் வே.மகேஸ்வரன், அரசியல் கட்சியினர்கள் பொதுமக்கள் என பலரும் மலர்மாலை அணிவித்து பொதுச்சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.