நேற்று முன்தினம் ஓர் அன்பர் தொலைபேசி எடுத்தார். உங்களின் ஆசிரியர் தலையங்கத்தை ஒழங்காக வாசிக்கின்றேன். நல்ல விடயங் களை எழுதுகிறீர்கள். ஆசிரியர் தினமாகிய ஒக்ரோபர் ஐந்தாம் திகதி தாங்கள் எழுதிய தோளில் தட்டியபோது உயர்ந்தோம்: எட்டடி தள்ளி நின்றபோது வீழ்ந்தோம் என்ற ஆசிரி யர் தலையங்கம் அருமை என்றார்.
நல்லது நன்றி என்றேன். என்ன வெறுப்போடு கூறுகின்றீர்கள் என்றார் அவர்.
ஆசிரியர் தலையங்கம் எழுதப்படுகிறது அதனை வாசிக்கின்றவர்கள் நல்லது என்கி றார்கள். அவ்வளவோடு அது முடிந்து போகிறது.
உண்மையில் நடைமுறைக்குரிய விடயம் எழுதப்படும்போது அதனை நிறைவேற்றுவத ற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும் என்றேன். புரியவில்லை என்றார் அவர்.
ஐயா! நேற்றைய தினம் கட்டாக்காலி நாய் கள் பற்றி இவ்விடத்தில் எழுதியிருந்தோம். யாரேனும் அதுபற்றிச் சிந்திக்கப் போகிறார் களா என்ன? ஏதோ எங்கள் கடமைக்கு எழுதிய திருப்தியைத் தவிர,
கட்டாக்காலி நாய்த் தொல்லை நீடிக்கப் போவது நிதர்சனம். நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தை வாசித்த முள்ளியவளை அன்பர் ஒருவர் முல்லைத்தீவில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று தன் மன ஆதங்கத்தைப் பதிவு செய்தார். பொதுமக்கள் கஷ்டப்படுவது பற்றி யாருக்கும் கவலை இல்லை என்றாகிறது.
கட்டாக்காலி நாய்களின் தொல்லை பற்றி எழுதும்போது, அதன் உண்மைத்தன்மையை அறிந்து, கட்டாக்காலி நாய்கள் விடயத்தில் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஒரு விசேட கூட்டத்தை மாவட்ட செயலகங் களில் கூட்டி, உள்ளூராட்சி அமைப்புக்களின் நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தி ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
ஆனால் இது தொடர்பில் ஏதேனும் நடக்கப் போவதில்லை. நாய்த்தொல்லை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
தெரு நாய்க்கடிக்கு ஆளாகின்றவர்களும் விபத்து மரணங்களும் இடைவிடாது தொட ரும். பதவியில் இருக்கின்ற காலத்தை ஒரு மாதிரியாகச் சமாளித்துவிட்டு போவதுதான் நோக்கமேயன்றி வேறு எதுவும் இல்லை எனும் போது, எழுதுவதால் என்ன பயன் என்ற விரக்தி நம்மிடம் இருக்கவே செய்கிறது என்றேன்.
எனது மனக்கிலேசத்தை அந்த அன்பர் அங்கீகரித்துக் கொண்டார்.
ஆக, பொதுமக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சி னைகளைத் தீர்க்கின்ற நடவடிக்கைகளை எடுப்பது அரச அதிகாரிகளினதும் தேர்தல் வழி வந்த மக்கள் பிரதிநிதிகளினதும் தலையாய கடமை. ஆனால் அவர்களுக்கு இதற்கெல்லாம் எங்கு நேரம்.
இப்போது மழை காலம் தொடங்கிவிட்டது. நெல் விதைப்பும் பயிர்ச்செய்கையும் ஆரம்பி த்து விட்டன. ஆனால் வடபுலத்தில் இருக்கின்ற அரச விவசாய அமைப்புக்களில் எத்தனையோ உழவு இயந்திரங்கள் பழுதடைந்து பாழாய்ப் போகின்றன.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், இயந்திரம் பழுது என்கிறார்கள். என்ன செய் வது விவசாயப் புரட்சி என்ற கோசத்தில் கூட அரச விவசாய அமைப்புக்கள் விழிப்படைய வில்லை என்றால், யார்தான் என்ன செய்ய முடியும்