நல்லாட்சி அரச எண்ணக்கருவை செயற்படுத்தும் போது ஏதேனும் ஒரு அரச பதவிக்கான நியமனத்தை வழங்குகையில் பக்கசார்பின்றி அந்த நியமனத்தை வழங்க வேண்டும் என தான் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
30 முதல் 32 வீதம் காணப்படும் அரச சேவையின் செயற்திறனை அதிகரித்து நாட்டின் நாளைய சவாலை வெற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பது முக்கியமானது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற வன பாதுகாப்பு திணைக்களத்திற்காக 310க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர்கள் கடந்த காலத்தில் ஜனாதிபதிகளின் விருப்பங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டனர்.
துறையில் அனுபவம் மற்றும் முதிர்ச்சி தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. எனினும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நீதித்துறையில் அனுபவம் பெற்ற சிரேஷ்ட நீதியரசரை, பிரதம நீதியரசராக நியமிக்க தான் பரிந்துரை செய்ததாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.