| யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்குறித்த விடயங்கள் அடங்கிய கலந்துரையாடலை நடத்தி அதன் பொதுத் தீர்மானத்தினை வெளியிடுமாறு கோரியிருந்தார். அதற்கு அமைவாகவே குறித்த கலந்துரையாடல் நேற்றைய தினம் நடாத்தப்பட்டு ஏகமனதான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி..விக்னேஸ்வரன், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்ரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். வலிகாமம் வடக்கில் முழுமையாக மீள்குடியேற்றம் இடம்பெறவேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும்போது மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் என எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக விமான நிலைய அபிவிருத்தி, மயிலிட்டிதுறைமுகம் அபிவிருத்தி என்பன இடம்பெறவேண்டுமாயின் வலிவடக்கில் மீள்குடியேற்றம் முழுமையாக இடம்பெறவேண்டும் என தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் மயிலிட்டி துறைமுகம் இலங்கையின் இரண்டாவது பெரிய மீன்பிடித் துறைமுகமாக உள்ளமையால் அது புனரமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளதுடன் அது தொடர்பில் அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடல் தொடர்பில் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகையில், வடமாகாண முன்னாள் ஆளுநர் பளிக்கார ஜனாதிபதிக்கு மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலை நடத்துமாறு கோரி கடிதம் ஒன்றினை எழுதியிருந்தார். அக்கடிதத்தில் இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடத்திற்கு செல்லவேண்டும், அது அவர்களுடைய உரிமை என ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன்படி இடம் பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ள மக்கள் அனைவரும் அவர்களது சொந்த இடத்திற்கு முதலில் செல்லவேண்டும். அதன் பின்னரே அப்பகுதிக்கான அபிவிருத்திகளை மேற்கொள்ளமுடியும். மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கும் போது அங்கு இராணுவ முகாம்கள் உள்ளன என்றதற்காக அத்தகைய அபிவிருத்திச் செயற்பாடுகளை நிறுத்தக்கூடாது. ஏனெனில் மீள்குடியமர்ந்தவர்களின் தேவையே அவசியம் என்றார். இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிடுகையில், வலி.வடக்கு மக்கள் 25 வருடங்களுக்கு மேலாக தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறாது நலன்புரி நிலையங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் பொது இடங்களிலும் பல்வேறு சொல்லலாணா துயரங்களுடன் வாழ்ந்து வருகிறார்கள். எனவே அவர்கள் விரைவில் மீள்குடியேற்றப்படவேண்டும். மக்கள் சொந்த இடத்திற்கு செல்லவேண்டும் என்பதில் நான் உறுதியாகவுள்ளேன். இதேவேளை நலன்புரி நிலையங்கள் மூடப்படவேண்டும் என்பதும் நல்லிணக்க அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது. எனவே மக்களின் நிலங்கள் விரைவில் ஒப்படைக்கப்படவேண்டும். அங்கு மக்கள் மீள்குடியேறுகின்றார்களோ இல்லையோ என்பது இரண்டாவது பிரச்சினை. இத்தகைய செயற்பாடுகள் இடம்பெற்றதன் பின்னர் தான் அப்பகுதியில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படமுடியும் என்றார். பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறிப்பிடுகையில் வலி. வடக்கு மக்கள் தங்கள் சொந்த இடத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதற்காகத்தான் நாம் மக்கள் இடம்பெயர்ந்த காலந்தொட்டு இன்றுவரை பல போராட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளோம்.அண்மையில் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம்.குறிப்பாக ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் குறித்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு எம்மால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வலிவடக்கில் முதலில் இடம்பெறவேண்டியது விமான நிலையமா? துறைமுகமா? மீள்குடியேற்றமா-? என்னிடம் கேட்டால் அவசரமானதும் அவசியமானதும் மீள்குடியேற்றமே என்பதே எனது பதிலாகும் என்றார். |
வலி.வடக்கில் மீள்குடியமர்வுக்குப் பின்னரே அபிவிருத்தி! - மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர்கள் உறுதி
Add Comments


