பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கவில்லை நீதிமன்றத்தினால் பிடியாணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டிருந்தது, என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வந்துரம தேர்தல் பிரசார மேடைக்கு தீ வைத்த சம்பவத்தில் பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து பலாத்காரமாக அழைத்துச் சென்றதாக முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாட்டினை மேற்கொண்டதையடுத்து கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸால் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதனையடுத்து முத்துஹெட்டிகமவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன பிடியாணை பிறப்பித்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை சிங்கப்பூரிற்குச் சென்றுள்ளதாகவும் தற்பாதுகாப்பு நோக்கிலேயே வந்தேன் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம பிரதி அமைச்சர் பிடியாணை இருக்கும் நிலையில் வெளிநாடு சென்றமை குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வெளிநாடு செல்ல முடியாது என்ற நீதிமன்ற தடை இல்லாத காரணத்தினாலேயே, விமான நிலையத்திலிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவரை நாட்டைவிட்டுச் செல்வதைத் தடுக்கவோ அல்லது அவரைக் கைது செய்யவோ முடியாமல் போனது.
எனினும் பொலிஸ் அதிகாரியொருவர் விமானநிலையத்தில் இருந்திருந்தால் மாத்திரமே அவரைக் கைது செய்திருக்க முடியும்.
இருப்பினும் பிரதி அமைச்சர் மீண்டும் நாட்டுக்கு வந்த பின்னரே அவரை கைது செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.