இதன் ஒரு கட்டமாக கொழும்பு முகத்துவாரம் ரொக் ஹவுஸ் இராணுவ முகாமுக்கு பெருமளவில் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி இரவில் இருந்து படையினர் குறித்த முகாமுக்கு வந்த வண்ண உள்ளனர். இராணுவத்தினரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. முகத்துவாரம் முகாம் கவசப் படைப்பிரிவுக்கு சொந்தமான முகாமாகும். இது இராணுவ தாங்கிகள் அடங்கிய படைப்பிரிவாகும். முகத்துவாரம் இராணுவ முகாமுக்கு மேலதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு வரும் நிலையில், வெளி பிரதேசங்களில் உள்ள முகாம்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் எந்தக் காரணம் கொண்டு தமது பிரதேசங்களில் இருந்து வெளியேறக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை அதிகாலையில் படையினர் பயிற்சி பெறும் போது வீதிகளில் செல்லும் மக்களுக்கு தெரியும் வகையில் பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் மக்கள் மத்தியில் இராணுவ மனநிலைமையை ஏற்படுத்த முடியும் என ஹெந்தாவித்தாரண ஆலோசனை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினம் இரவு பொது வேட்பாளர் சரத் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட எதிரணி தலைவர்கள் இருந்த ஹொட்டலை சுற்றிவளைத்து இராணுவ நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கோத்தபாய இதுபோன்று கொழும்பு மேலதிக இராணுவத்தினரை வரவழைத்திருந்தார். இது குறித்து இணைய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அப்போது அதனை கவனத்தில் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ள சூழ்நிலையில், அதனை தடுக்க இராணுவத்தின் மூலம் அடக்குமுறையாக நிலைமை உருவாக்க கோத்தபாய தயாராகி வருகிறார். எனினும் இராணுவத்தில் இருக்கும் பெரும்பாலான கட்டளை அதிகாரிகள் இதனை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதேவேளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் கூட்டத்தில் குண்டு ஒன்றை வெடிக்க செய்து விடுதலைப் புலிகளே அதனை செய்தனர் எனக் கூறி, எதிர்க்கட்சியினரை கைது செய்யும் சதித்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. |
கொழும்பில் கவசப்படைப்பிரிவு முகாமில் குவிக்கப்படும் படையினர்! – கோத்தபாயவின் புதிய இராணுவ நடவடிக்கை.
Add Comments