மகிந்தவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றால் மட்டுமே சமுர்த்திப் பணம்!


news
யாழில் இடம்பெறும் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கே 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நாடுமுழுவதும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரை  நடவடிக்கைகள் உச்சம் அடைந்துள்ளன. இந்த நிலையில் பரப்புரைக் கூட்டத்தினை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாளைய தினம் வருகைதரவுள்ளார்.
 
எனவே மகிந்த பங்கேற்கும் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க வேண்டும் என அவர் சார்ந்த கட்சியினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதையடுத்து அக்கட்சியினர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து சமுர்த்திப் பயனாளிகளை சந்திக்கின்றனர்.  இதன்போது அவர்கள், மகிந்தவின் கூட்டங்களில் பயனாளிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவ்வாறு பங்கேற்றாலே வீட்டின் சிறு திருத்த வேலைகளுக்காக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவின், முதல் கட்டக் கொடுப்பனவான 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.
 
அத்துடன் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை தீவக பகுதிகளிலுள்ள மக்களுக்கு மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றால் தொலைக்காட்சி அலைவரிசை இணைப்பு இலவசமாக வழங்கப்படும் எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila