தேங்காய் உடைப்பு அரசியல்' உணர்த்தும் சந்தேகம்

யோஷித ராஜபக்ச என்பவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பது இப்போது முக்கியமல்ல. நீதித்துறை தனது கடமையை சுயாதீனமாக ஆற்றுவதற்கு இடமளிக்காமல், மேடை போட்டு கோஷம் எழுப்புவதும் தேங்காய்களை உடைப்பதும் ஏதோவொரு சந்தேகத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்கின்ற FCID பிரிவின் நடவடிக்கைகளை துரும்பாக வைத்துக் கொண்டு, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியென தங்களைக் கூறிக் கொள்கின்ற அணியினர் பெரும் அரசியல் வியாபாரமே நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இயங்குகின்ற அந்த அணியினரைப் பொறுத்தவரை அவர்களது இன்றைய அரசியல் மேடைகளில் அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களின் பிரதான பேசுபொருள் FCID விசாரணைப் பிரிவுதான்.
FCID பிரிவானது மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரை மாத்திரம் விசாரணைக்கு அழைக்கவில்லை. முன்னைய ஆட்சிக் காலத்தின் போது ஊழல் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பலரை விசாரணைக்காக அழைத்திருக்கிறது இப்பிரிவு.
ஆனாலும் FCID பிரிவானது ராஜபக்ச குடும்பத்தை மாத்திரமே சுற்றி வளைப்பதாக மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் கூறி வருகின்றனர். ராஜபக்ச குடும்பத்தினருக்கு அநீதியும் பழிவாங்கலும் இழைக்கப்படுவதாக சிங்கள மக்களை நம்பச் செய்தவன் மூலம் அனுதாப அலையை பெருமளவில் சம்பாதித்துக் கொள்ள முடியுமென அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
1978 ஆம் ஆண்டு நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை விட்டுச் சென்ற பின்னரும் சட்ட நடவடிக்கையின் கீழ் அவர் பாதுகாப்புப் பெறுவதற்கு ஏற்பாடுகள் உள்ளன. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதியின் குடும்பத்தினர் அவ்வாறான விசேட சலுகையைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் அல்லர்.
ஆனாலும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரான யோசித ராஜபக்சவைக் கைது செய்தமை இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் முரணான செயலென்பது போன்றே மஹிந்த அணியினர் இப்போது தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நாளாந்தம் வகை தொகையின்றி தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன.
யோஷித ராஜபக்ச எதுவித குற்றமும் இழைக்காதவரெனவும், ராஜபக்ச குடும்பத்தினரைப் பழிவாங்குவதற்காகவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாகவும் மஹிந்த அணியினர் கூறுகின்றனர்.
முன்னைய ஆட்சிக் காலத்தின் பேது மஹிந்த ராஜபக்சவின் தீவிர விரோதியாக இனம் காணப்பட்டவரும், முன்னாள் பிரதம நீதியரசருமான சரத் என். சில்வாவும் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியிலேயே ஊடகங்களிடம் பேசுகிறார்.
சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனம் யோசித ராஜபக்சவுக்குச் சொந்தமானதென அவர் மீது விசாரணை நடத்தியுள்ள விசாரணைப் பிரிவு கூறுகிறது. ஆனால் சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளர் யோஷித ராஜபக்ச அல்லவென்று மஹிந்த தரப்பு கூறுகிறது.
சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிப்பதற்காக அரசாங்கத்தின் பெருமளவு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக யோஷிதவை விசாரணை செய்த FCID பிரிவு வட்டாரங்கள் கூறுகின்றன.
இக்குற்றச்சாட்டு மிகவும் பாரதூரத் தன்மை வாய்ந்ததாக இருந்ததாலேயே யோஷிதவை விளக்கமறியலில் வைக்க வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு ஏற்பட்டது.
இவ்விவகாரமானது இலங்கையின் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டதாகும். நீதிமன்றத்தின் முடிவுகள் குறித்து விமர்சிப்பதோ, அபிப்பிராயம் கூறுவதோ குற்றங்களாகும்.
ஆனாலும் யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டதையடுத்து மஹிந்த தரப்பிலுள்ள முக்கிய புள்ளிகள் வெளியிடுகின்ற கருத்துகள் நீதிமன்றத்தை அவமதிப்பதாகவே அமைந்திருக்கின்றன.
அதாவது எந்தவிதக் குற்றமும் இழைக்காத நிரபராதி ஒருவர் நீதிக்குப் புறம்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மஹிந்த அணி குற்றம் சுமத்துகிறது.
இக்கருத்தைப் பார்க்குமிடத்து நீதிமன்றம் தவறிழைத்து விட்டதாக உட்கருத்து புலப்படுகின்றது.
அதேசமயம் நேற்று முன்தினம் தனியார் தொலைக்காட்சியொன்றில் தோன்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, சி. எஸ். என். தொலைக்காட்சி நிறுவனத்துக்குப் பயன்படுத்தப்பட்ட நிதியையும் தனியார் ஊடக நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்கப் பயன்படுத்தப்பட்ட நிதியையும் ஒப்பீடு செய்து கருத்து வெளியிட்டார்.
ஒரு சம்பவம் தவறாக இருக்கும் போது மற்றைய சம்பவத்தை எவ்வாறு தவறெனக் கூறுவது என்ற அர்த்தத்திலேயே சரத் என். சில்வாவின் வாதம் அமைந்திருந்தது.
நாட்டின் சட்டமானது சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எவ்வாறெல்லாம் வளைக்கப்படுகிறது என்பதை நினைக்கையில் வேடிக்கையாகவே உள்ளது.
குற்றம் என்பது குற்றம் தான். அதனை எவர் இழைத்தாலும் அது குற்றம் தான். மற்றொரு குற்றத்துடனோ அல்லது குற்றச்சாட்டுடனோ ஒப்பீடு செய்வதால் இந்தத் தரப்பிலுள்ள குற்றம் நியாயமாகி விடப் போவதில்லை.
இவ்வாறான நியாயம் பாமர மக்களுக்கு நன்கு புரிந்தே இருக்கிறது.
யோஷித ராஜபக்ச என்பவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பது இப்போது முக்கியமல்ல. ஆதாரங்களின் அடிப்படையில் அதனைத் தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு.
அவ்வாறிருக்கையில் நீதித்துறையைக் கேலிக்கூத்தாக்க முற்படுவது தவறும் குற்றமும் ஆகும்.
நீதித்துறை தனது கடமையை சுயாதீனமாக ஆற்றுவதற்கு இடமளிக்காமல், மேடை போட்டு கோஷம் எழுப்புவதும் தேங்காய்களை உடைப்பதும் ஏதோவொரு சந்தேகத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.
இத்தனை ஆரவாரங்கள் நடப்பதனால் உண்மையிலேயே பாரதூரமான குற்றம் இழைக்கப்பட்டுள்ளதா? அதனை மறைக்க இவர்கள் முற்படுகின்றார்களா?  மக்கள் இவ்வாறுதான் எண்ணுகின்றனர்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila