பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம்! இராணுவத்தின் இன்னொரு அதிகாரிக்கு இன்று விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்ட வழக்கில் இன்னொரு இராணுவ சார்ஜண்ட் ஒருவருக்கு இன்று விளக்கமறியல் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.
பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பொலிசார் குறித்த இராணுவ சார்ஜண்ட் மேஜரை கைது செய்திருந்தனர்.
பொலிசார் இன்று ராணுவ சார்ஜண்ட் மேஜரை ஹோமாகம மாஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 23ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் 23ம் திகதி பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான விசாரணை மற்றும் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஆகியன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எக்னெலிகொட கடத்தல் விவகாரத்தில் இன்று கைது செய்யப்பட்ட வரையும் சேர்த்து இதுவரை எட்டு இராணுவ அதிகாரிகள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஊடகவியலாளர் லசந்த கொலையிலும் கப்டன் திஸ்ஸவுக்குத் தொடர்பு
பிரபல சிங்கள ஊடகவியலாளர் லசந்த கொலையிலும் கப்டன் திஸ்ஸ எனப்படும் ராணுவ அதிகாரி தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்திற்கு நெருக்கமானவரும், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் முன்னைய அதிகாரிகளில் ஒருவருமான கப்டன் திஸ்ஸவின் பெயர் இந்நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற பல்வேறு கொலைச்சம்பவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்பட்டது.
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை மற்றும் மர்ம மரணத்தைத் தழுவிய இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள், உள்ளிட்ட பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் கெப்டன் திஸ்ஸவுக்குத் தொடர்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட பிரபல சிங்கள ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களின் உருவ ஓவியங்களை அண்மையில் பொலிஸ் திணைக்களம் வெளியிட்டிருந்தது.
கொலைச் சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சிகளின் உதவியுடன் குறித்த உருவ ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது.
அவ்வாறு வெளியிடப்பட்ட ஒரு உருவப் படம் ராஜபக்ஸவினரின் கொலைக்குழுவின் தலைவன் கப்டன் திஸ்ஸவின் உருவத்தை ஒத்திருப்பதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் லசந்த கொலையிலும் கப்டன் திஸ்ஸவுக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் தோன்றியுள்ளது.
லசந்த விக்கிரமதுங்க ராஜபக்ஸவினரின் ஆசீர்வாதத்துடன் படுகொலை செய்யப்பட்டதாகவே இதுவரை அனைத்து ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளும் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்த நபர் திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila