முல்லைத்தீவு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலால் தமது வாழ்வதாரம் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை தொடர்கதையாக நீள்கின்றது.
தமது கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள முல்லை கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் இதனைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அற்ற நிலையே காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு கடற்பரப்பின் பெரும்பாலான பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலாலும் ஆக்கிரமிப்பாலும் பிரதேச மீனவர்கள் தொழிலில் ஈடுபட முடியாத நிலமை காணப்படுகின்றது. காவல்துறை மற்றும் இராணுவமும் இச் செயற்பாட்டுக்கு ஆதரவு வழங்குகின்றது.
கொக்கிளாய் முதல் முல்லை நகரம் வரை தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறல் காணப்படுவதுடன் இறுதியுத்தம் நடந்த முல்லைத்தீவு கடற்பரப்பிலும் இந்த அத்துமீறல் தொடர்கிறது. இதனால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்வாதாரத்தை பெறுவதில் பெரும் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
இதேவேளை நாயாறு போன்ற பகுதிகளிலும் தென்னிலங்கை மீனவர்கள் மீன் பிடியில் ஈடுபடுவதால் அப் பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாக முல்லை கடற்தொழிலாளர் சங்க தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் கூறினார்.
இதேவேளை இறுதி யுத்தம் நடந்த நந்திக்கடலில் இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். அப் பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் தமது உணவுத் தேவைக்காக மீன்பிடியில் ஈடுபடுகின்றனர்.
இதனால் காலம் காலம்மாக பாரம்பரியமாக அப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டு தமது வாழ்வாதாரத்தை கொண்டு நடந்தும் பிரதேச மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எடுத்துக் கூறினாலும் தடுத்து முடியாத நிலையே தொடர்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


