கிழக்கு முதலமைச்சர் பிரதேசவாதம் பேசுவது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது!- இராதாகிருஸ்ணன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் பிரதேச வாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் இசட்.ஏ. நசீர் அஹமட் கல்வி இராஜாங்க அமைச்சர் மலையகத்தில் இருந்து வந்து மாகாண அதிகாரங்களுக்கு சவால் விடுக்கின்றார் என்ற தலைப்பில் தெரிவித்துள்ள கருத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.
“கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்தானது முற்றிலும் பிழையான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன்”
அரசியல் அனுபவம் அரசியல் முதிர்ச்சி இல்லாத ஒருவருடைய செயற்பாடாகவே நான் இதனை கருதுகின்றேன்.
மேடை பேச்சு என்பது நாகரீகமாக இருக்க வேண்டும்.நமது கருத்தக்கள் ஊடகங்கள் வாயிலாக பல்வேறு தரப்பினரையும் சென்றடைகின்ற காரணத்தால் நாங்கள் என்ன பேசுகின்றோம் எங்கே பேசுகின்றோம் என்பதை தெரிந்து கொண்டு பேசுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
என்னை பொறுத்த வரை நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் அதேபோல அமைச்சு றிசாட் பதியுதீனுடனும் சுமுகமான உறவை கொண்டவன் என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிடுவதானது எமது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற விடயங்களை உருவாக்கும்.
எனவே மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிட வேண்டும்.
மலையகத்தில் இருந்து வந்தவர் என்று தம்மை கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டிருப்பதானது பிரதேசவாதத்தை தூண்டும் ஒரு செயலாகவே தாம் கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
தயவு செய்து பிரதேச வாதத்தை தூண்டி தங்களின் அரசியலை செய்ய முற்பட வேண்டாம்.
நீண்ட இடைவேளைக்கு பின்பு தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயற்பட்டு வருகின்ற இந்த சூழ்நிலையை இல்லாமல் செய்து விட வேண்டாம். கடந்த காலங்களில் எதிரும் புதிருமாக இருந்து அரசியல் செய்த பல பெரும்பான்மையினர் இன்று ஒரே குடையின் கீழ் நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கின்றார்கள்.
எனவே நாம் இவ்வாறு செயற்படுவது அவர்கள் மத்தியில் நம்மை ஒரு சமூகத்தை ஏளனப்படுத்திக் கொள்ளும் ஒரு செயலாகும்.எனவே இதனை உடன் நிறுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கு அண்மையில் விஜயம் செய்த கல்வி ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், கிழக்கு மாகாணசபையின் கீழ் வரும் பாடசாலையில் இடம்பெற்ற திறப்பு விழா ஒன்றில் பங்கேற்றமை தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கண்டனம் வெளியிட்டார்.
அதில் இராதாகிருஸ்ணனை அவர் மலையகத்தில் இருந்து வந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த விமர்சனம் தொடர்பிலேயே கல்வி இராஜாங்க அமைச்சர், கிழக்கு முதலமைச்சருக்கு கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila