கழிவுகளை தின்ற மாடுகள் உயிரிழப்பு யாழில் பரபரப்பு சம்பவம்!

யாழ். வடமராட்சி கிழக்கு, நித்தியவெட்டை முள்ளியான் ஜே-433 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள 55 பிரிவு படை முகாமிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் பொது மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு அருகில் அனுமதிக்கப்படாத இடத்தில் பாதுகாப்பற்ற வகையில் கொட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், கொட்டப்பட்ட கழிவுகளில் நச்சு மருந்து வகை ஊற்றப்படுவதாகவும் அதனால் கழிவுகளை உண்ட பல மாடுகள் இறந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு, கழிவுகளை உட்கொண்ட 11 மாடுகள் உயிழந்துள்ளதுடன், மேலும் பல மாடுகள் உயிருக்காக பேராடிக்கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், குறித்த பகுதி மக்களின் பிரதான வாழ்வாதாரங்களில் மாடு வளர்ப்பும் ஒன்று. ஆகையினால் இந்தச் சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த பிரதேசத்தில் பெருமளவு மாடுகள் திறந்த வெளி மேச்சல் மூலமே மக்களால் வளர்க்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு திறந்த வெளி மேச்சலுக்கு  செல்கின்ற மாடுகளே 55 ஆவது படை பிரிவு முகாமிலிருந்து வெளியில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படுகின்ற கழிவுகளை உட்கொண்டு இறந்துள்ளன.

அத்துடன், இக்கழிவுகளை உட்கொள்கின்ற நாய், காகம் உள்ளிட்ட ஏனைய விலங்குகளும் இறப்பதாக பிரதேச பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஆங்காங்கே இறந்து கிடக்கின்ற மாடுகளை உணவாக உட்கொள்கின்ற நாய்கள் கூட ஒரு சில நாட்களில் மயிர்கள் உதிர்ந்து குட்டை பிடித்து காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.
அதிகளவான கழிவுகளை உண்ணுகின்ற மாடுகள் உடனடியாகவே அந்தந்த இடங்களில் இறந்து விடுவதாகவும், ஓரளவுக்கு உட்கொள்கின்ற மாடுகள் பட்டிக்கு திரும்பிய நிலையில் இரவோ அல்லது மறுநாளோ இறப்பதாகவும் மக்கள் கவலை அடைக்கின்றனர்.
எனவே மக்களுக்கும் எந்த பாதிப்பும் வருவதற்கு முன் விரைந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்
பிரதேச பொது மக்களால் குறித்த விடயம் 55ஆவது படைப்பிரிவு இரானுவ அதிகாரியிடம் தெரிவித்த போது தான் கவனிப்பதாக கூறப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை எனவும், தாங்கள் வளர்க்கின்ற மாடுகள் பட்டிகளிலும், ஆங்காங்கேயும் இறந்து கிடப்பது தங்களுக்கு பெரும் மனவேதனையை அளிப்பதாகவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு மாடுகள் இறப்பது தங்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிப்பதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி உதவி அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதுடன், உதவி அரச அதிபர் நேற்று வருகை தந்து நிலைமைகளை பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் இரானுவத்தினரால் கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தினை பார்வையிட்டு அறிக்கையிட ஊடகவியலாளர்கள் சென்ற போது இரானுவத்தினரால் குறித்த இடம் தகரங்கள் கொண்டு அடைக்கப்பட்டு கனரக இயந்திரம் கொண்டு கழிவுக்ள புதைக்கப்பட்டுகொண்டிருந்தாகவும், அதனை புகைப்படம் எடுக்க இரானுவத்தினரால் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாது திருப்பி அனுப்பட்டதாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.











Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila