வடமாகாணம் தொடர்பில் நடக்கவிருந்த சதி -அம்பலப்படுத்தினார் முதலமைச்சர்(காணொளி)


“தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய
பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன” என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடுமையாக எச்சரித்துள்ளார். “கடந்த அமைச்சரவைக் கூட்டத்துக்கு நான் சென்றதால்தான் வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது தெரிந்தது. நான் சென்றதால் சதி அம்பலமானது” எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

‘உயர்த்தும் கரங்கள்’ செயற்திட்டத்தினூடாக ‘ராஜா பிளாசா’ மாதிரிக் கிராமம் 15 வீட்டுத்திட்ட திறப்புவிழா இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மஸ்கன் வீதி, புத்தூர் தெற்கு, நவக்கிரியில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.

முதலமைச்சர் இங்கு தனது உரையில் தெரிவித்திருப்பதாவது:

“இன்று ஒரு இனிய நாள். பதினான்கு குடும்பங்களைச் சேர்ந்த குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வில் அதிஸ்டம் அவர்களை அணைத்துக் கொள்ளும் நாள். அழகிய இந்த வீடுகள் அவர்களுக்குக் கொடையாக வழங்கப்பட்டிருக்கின்ற நாள். இந்த நல்ல கைங்கரியத்தில் இணைந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அற்புத நர்த்தன விநாயகர் சனசமூக நிலையம் மற்றும் குமரன் விளையாட்டுக்கழகம் ஆகியன இணைந்து கொண்டு ‘வறுமையை ஒழிப்போம் கல்வியைக் கொடுப்போம்’ என்ற தொனிப் பொருளில் 2014ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “உயர்த்தும் கரங்கள்” என்ற செயற்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இன்றைய இந்த வீடுகள் அமைக்குந் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வறுமையை ஒழிப்போம் என்ற இச் செயற்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறுவது மட்டுமன்றி இப் பிரதேசத்தின் நலன் விரும்பிகளுக்கான உதவிகள், மற்றும் திருமண நிகழ்வுகளுக்கான உதவிகள், முதியோர் இல்லங்களுக்கான விசே~ உணவுகள், வெள்ள நிவாரணம் என இன்னோரன்ன பல பணிகளை இச் சனசமூக நிலையத்தினர் நிறைவேற்றி வருகின்றமை பாராட்டப்பட வேண்டியவை.

இவ்வாறான சமூகப் பணிகள் அனைத்திற்கும் மகுடம் சூட்டியது போன்று அமையும் இந்த 15 வீடுகள் அமைக்கின்ற பணிக்கு கோண்டாவில் பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளர் இராசையா குவேந்திரநாதன் அவர்களே முழுமையான நிதிப் பங்களிப்பை வழங்கியுள்ளார். இவ் அழகிய வீடுகளை உருவாக்கி இச் சனசமூக நிலையத் தெரிவினூடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவற்றை வழங்கியிருப்பது போற்றப்பட வேண்டியதொன்று. சுமார் 3 ½ கோடி ரூபா செலவில் இந்த வீட்டுத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என அறிகின்றேன். அதாவது ஒவ்வொரு வீடும் 23 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இவற்றை அமைத்துக் கொடுத்த பெரு வள்ளல் இராசையா குவேந்திரநாதன் அவர்கள் தொடர்பாக அறிய முற்பட்ட வேளையில் அவரின் அயரா உழைப்;பு, பரோபகார சிந்தை, தூர நோக்கு ஆகிய அவரின் பல நற்பண்புகள் எமக்குத் தெரிய வந்தன.

முன்னேற்றகரமான திட்டங்கள்

குவேந்திரநாதன் அவர்கள் இந்த வீட்டுத்திட்டம் மட்டுமல்ல இன்னும் பல முன்னேற்றகரமான பொதுப் பணிகளுக்கு உதவி வந்துள்ளார். கோண்டாவில் உப தபால் அலுவலகத்திற்கு சுமார் 60 இலட்சம் பெறுமதியான ஒரு அழகிய கட்டடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். யாழ் கோண்டாவில் ராமகிரு~;ண மகா வித்தியாலயத்திற்கு 120 இலட்சம் ரூபா செலவில் 4 பரப்புக் காணியையும் அதனுள் 2 மாடிகளைக் கொண்ட 4 வகுப்பறை கட்டடத்தையுந் தமது பெற்றோரின் ஞாபகார்த்தமாக அன்பளிப்புச் செய்துள்ளார். 100 இலட்சம் ரூபா செலவில் கோண்டாவில் சனசமூக நிலைய முன்பள்ளியை விருத்தி செய்யும் நோக்குடன் 2 ½ பரப்பு காணி, முன்பள்ளி, பகல் நேர குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வாறான பணிகளில் ஈடுபட்டிருப்பது எமக்கு மட்டுமல்ல வடபகுதியைச் சார்ந்த அனைத்து மக்களையும் மகிழ்வூட்டி வருகின்றன.

இவ்வளவு தொகைப் பணத்தை எவ்வாறு செலவழிக்க முன்வந்தார் என அறிய வந்த போது கட்டடத் தொழிலில் ஒரு ஒப்பந்தக்காரராக, புதிய வீடுகளை அமைத்து விற்பனை செய்பவராகத் தமது தொழிலை ஆரம்பித்த குவேந்திரநாதன் மூன்று பிள்ளைகளின் தந்தையாராக இருப்பதையும் முதலாவது மகன் கொழும்பில் டாக்டராகவும், இரண்டாவது மகள் விவசாயப் பீட விரிவுரையாளராகவும், மூன்றாவது மகள் மக்கள் வங்கி உத்தியோகத்தராகவும் இருப்பது தெரியவந்தது. பிள்ளைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்த பின்னர் இனி அவர்கள் பங்கிற்கு அவர்கள் உழைத்துக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாங்குடன் தனக்கு இப்போது கிடைக்கின்ற வருமானம் முழுவதையும் பொதுப் பணிகளுக்கு செலவிடுவதாக அவர் தீர்மானம் எடுத்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது. அதற்கு அவர் பிள்ளைகளும் மனமுவந்து பச்சைக்கொடி காட்டியுள்ளார்கள். தந்தையாரின் அறப்பணிகளுக்குத் தாமும் இணைந்து பணியாற்றுவது மட்டுமன்றி புதிய புதிய அறப்பணிகளில் அவர்களும் ஈடுபட்டு வருகின்றார்கள். அவர்களின் குடும்பமே பரோபகார சிந்தனை உடையவர்கள் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற ஒரு நடன நிகழ்வில் உரையாற்றும் போது ஆறு திருமுருகன் அவர்கள் ஆற்றிய உரை ஒன்றைப் பற்றி அறிய நேர்ந்தது. அதில் அவர் யாழ்ப்பாணத்தவரும் சிங்கப்பூரில் வசித்தவருமாகிய எஸ்ரேட் கார்த்திகேசு அவர்களின் அறக்கொடை நிதியில் சுமார் 90 மில்லியன் ரூபா பணம் வடபகுதியில் உள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் நூல் நிலையத்தை விருத்தி செய்வதற்கும் நுண்கலைப் பீடத்தை விருத்தி செய்வதற்கும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்தத் தொகையில் இருந்து இதுவரை 25 ஆயிரம் ரூபா மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாகவுந் தெரிவித்திருந்தார்.

முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை

அதாவது நொந்து போன எம்மக்களைத் தாங்குவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பரோபகாரிகள் தயாராக இருக்கின்ற போதும் அவர்களின் பரோபகார சிந்தனைகள் தாராள மனப்பான்மைகள் ஆகியவற்றை நாம் முறையாக ஒழுங்கு செய்ய முடியாது முழுமையாகப் பயன்படுத்த முடியாது இருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டும். கொடையாளர்களையும் வறுமையில் வாடும் எமது பயனாளிகளையும் ஒன்றிணைக்க நாம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதனால்த்தான் இன்று பல பிரச்சனைகள் மத்தியிலும் நான் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். கொடுக்கும் மனமுள்ளவர்களை மனங்கோணாமல் நாம் வாழ வழி அமைக்க வேண்டும். எங்கள் அன்பும் பாராட்டும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று இத்தருணத்தில் கூறி வைக்கின்றேன்.

முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கு தயார் செய்யப்பட்ட நியதிச் சட்டம் நிறைவுறும் நிலையில் உள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் வெளிநாட்டில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் நிதி வழங்குபவர்கள் இந்த நிதியத்தினூடாகத் தாம் விரும்பியவாறு விரும்பிய வேலைத்திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆளுநர் குழாமொன்றே அந்நிதியத்தைப் பரிபாலிக்கும். உரிய கணக்காய்வு போன்றவை காலத்திற்குக் காலம் நடைபெறும். அரசாங்க அனுசரணையுடனேயே அதை வழிநடத்த எண்ணியுள்ளோம்.

இந்த புதிய வீடுகள் அமைத்து அதற்கான பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகளின் போது பயனாளிகள் தெரிவில் கோண்டாவில் பகுதியில் இருந்து 4 பயனாளிகளைத் தெரிவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும், ஆனால் எதிர்பார்த்த அந்தப் பயனாளிகளில் ஓரிருவர் இந்த இடம் தூரம், வசதிகள் போதுமானதாக இல்லை என்ற காரணங்களைக் காட்டி ஏற்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது. இவ்வாறானவர்களுக்கு 23 இலட்சம் ரூபா சிலவேளைகளில் சில்லறைக்காசாக இருக்கலாம். ஆனால் 23 ரூபாவிற்கு வழியில்லாத பலர் வன்னிப் பகுதியில் ஒரு நேர உணவுக்கே வழியின்றி, இருக்க இடமின்றி, தகரக் கொட்டில்களிலும், ஓலைக் கீற்றுகளிலும,; மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள் ஆகிய எந்தவித வசதிகளும் இன்றி வாடுகின்றார்கள். சிலர் பல்வேறு பாதிப்புக்களுடன் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புக்களை இழந்து, கண்பார்வையற்று தினமும் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம் மக்களுக்கு இவ்வாறான உதவிகள் கிடைக்கப் பெறின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகின்றேன்.



வன்னியில் தொடரும் அவலம்

அன்பான கொடையாளர் குவேந்திரநாதன் அவர்களே! பல தேவைகளையுடைய மக்கள் வன்னிப் பகுதியில் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு இவ்வாறான அறக்கொடைகளை மேற்கொள்வதற்கு இன்னோர் சந்தர்ப்பம் கிடைக்கும் என்றால் அதனூடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபா 10 இலட்சம் மட்டும் என்ற கணக்கில் சிலருக்கு உதவி செய்ய முன்வாருங்கள். உண்மையான வறிய குடும்ப அங்கத்தவர்களை எமது உதவி வழங்கும் வங்கியில் இருந்து அவர்களின் விபரங்களை உங்களுக்கு தருகின்றோம். உங்கள் உதவிக் கரங்கள் வன்னி வரை நீளட்டும்.

அன்பான என் சகோதர சகோதரிகளே! வன்னியை வாழ வைக்குங் கடப்பாடு எங்களுக்குண்டு என்பதை மறவாதீர்கள். யாழ்ப்பாணக் குடாநாட்டு இளைஞர் யுவதிகள் வெளிநாடுகளுக்கு ஓடவே கண்ணுங் கருத்துமாக உள்ளார்கள். எமது மக்கள் யாவரும் வெளிநாடுகளுக்குச் செல்ல உத்தேசித்தால் நாம் ஏன் இத்தனை போராட்டங்களில் இறங்க வேண்டும்? பேசாமல் அரசாங்கம் செய்வதைச் செய்யட்டும் என்று விட்டு விடலாமே? வன்னி மக்கள் போரின் உக்கிரத்திற்கு முகங் கொடுத்தவர்கள். போர் வடுக்களைச் சுமப்பவர்கள் அவர்கள். எனவே எங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் உரியவர்கள் அவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

இன்று இந்த புதிய வீடுகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள் இந்த வீடுகளை முறையாகப் பேணி பாதுகாப்பதுடன் அயலில் வாடும் மக்களுடன் நெருங்கிய உறவையும், புரிந்துணர்வையும் பேணிக் கொண்டு எந்தவித கருத்து வேறுபாடுகளோ அல்லது போட்டி பொறாமைகளோ இன்றி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கத்தக்க வகையில் உங்கள் வாழ்க்கை முறைமையை அமைத்துக் கொள்ள முன்வரவேண்டும். புதிய வீடு கிடைத்துவிட்டது தானே என வாழாதிருக்காது உங்களாலான முயற்சிகளையும் உடல் உழைப்புக்களையும் பொருள் தேடலுக்காகப் பயன்படுத்த வேண்டும். அதன்பின் உங்கள் உழைப்பைப் பாவித்து நீங்கள் மற்றவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். அவ்வாறு உதவினால் உங்கள் மீதுள்ள பொறாமையும் காழ்ப்புணர்ச்சியும் கரைந்து போய் விடுவன. இவ்வாறான நடவடிக்கைகளால் சமூக மறுமலர்ச்சி ஏற்படுவது திண்ணம். அப்போது தான் இவ்வாறான கொடையாளர்கள் தமது இலட்சியம் நூறு வீத வெற்றி அடைந்துள்ளதெனக் கண்டு மனம் மகிழ்வார்கள்.

கொஸ்கம முகாம் வெடி விபத்து

அண்மையில் கொஸ்கம சாலாவ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்துக்கள் அப்பாவி சிங்கள மக்களை கதிகலங்க வைத்தது. அது போன்ற எத்தனை வெடி விபத்துக்களைத் தமிழ் மக்கள் அனுபவித்து அல்லல்பட்டிருப்பார்கள் என்பதனை அனுபவ வாயிலாகவே இப்போது சிங்கள மக்கள் உணர்ந்திருக்கின்றார்கள். அதற்காகச் சாதாரண சிங்கள மக்கள் தமது வருத்தங்களைத் தெரிவிக்கவும் பின்நிற்கவில்லை. நன்றாக வாழ்ந்த பல குடும்பங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருந்து 27 வருடங்களாக அகதி முகாம்களில் தரித்து நிற்கின்றார்கள். தமது சொந்த மண்ணில் சொந்த வீட்டில் வாழக் கூடிய சூழ்நிலை எப்போது வரும், எப்போது வரும் எனக் காத்துத் தவம் கிடக்கின்றார்கள். இந்தக் காத்துக் கிடத்தலானது தெற்கின் மக்களைத் தற்பொழுது தாக்கியுள்ளது. எம் மக்களின் பரிதாபகரமான நிலை பற்றி எமது அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் பல மேடைகளில் சிங்கள மக்கள் முன்நிலையிலும் வெளிநாடுகளிலும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் எமது மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவதற்கான காலம் நெருங்கி வரவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.

இந்த ஈவினைப் பகுதி ஒரு காலத்தில் மஸ்கன் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழிற்சாலையைக் கொண்ட ஓர் இடமாக விளங்கியது. இங்கே மஸ்கன் நிறுவனத்தினால் நிறுவப்பட்டிருந்த கூரைத்தகடு தயாரிக்கப்படும் மிகப் பெரிய தொழிற்சாலை இப் பகுதியில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் காரணமாக மூடப்பட்டு கொழும்புப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமது பகுதியைச் சேர்ந்த தமிழர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வாறான தொழிற்சாலைகள்; பல மூடப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் நகர்த்தப்பட்டுள்ளன. இதனால் நட்டமடைந்தவர்கள் எம்மக்களே. வீடுகளைக் கட்ட முன்வந்திருக்கும் எமது கொடையாளர்கள் தொழில் வாய்ப்புக்களை மக்களுக்கு உண்டாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கவும் பின்னிற்கக் கூடாது. சிறிய சிறிய கைத்தொழில்களைச் செய்ய முன்வருவோர் ஆரம்ப முதலைப் பெற முடியாமல் வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சுழல் நிதியத்தை அமைத்து மக்களைக் குடிசைக் கைத்தொழில்களில் ஈடுபட வைக்கும் அதே நேரம் சிறிய வட்டியில் முதல் பெற்று சிறுகைத்தொழில்களில் அவர்களை ஈடுபடவைக்கலாம். எடுத்த கடனைத் திரும்பப் பெறும் வகையில் நாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். அதனால் சுழல் நிதியம் தொடர்ந்து மக்களுக்கு உதவி பயக்கும். நம்மை நாமே பார்த்தக் கொள்ளும், பராமரிக்கும் காலம் வந்துள்ளது. சூழலை அறிந்து நாம் செயற்பட முன்வர வேண்டும்.

வடமாகாணம் தொடர்பான சதி

சென்ற திங்கட் கிழமை மத்திய அமைச்சர் அவை அமைச்சர்களுடன் மற்றைய முதலமைச்சர்களுடன் அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. பல சவால்களை எதிர் கொண்டு முதல் நாளிரவு நான் கொழும்புக்கு இரயிலில் சென்றேன். கூட்டத்திற்குச் சென்றதுந் தான் தெரிந்தது வட மாகாணம் சம்பந்தமாக அங்கு ஒரு சதி நடைபெற இருந்தது என்பது. நான் சென்றதால் சதி அம்பலமானது.

வடமாகாணம் நோக்கி எமக்கு பொருளாதார மையமொன்றைத் தருவது போல் இது காறும் பெரிதாகக் கூறி வந்த கிராமிய பொருளாதார அமைச்சர் தன் உள்ளக் கிடக்கையை அன்று வெளியிட்டுவிட்டார். நான் அன்று வருகை தர இருந்ததை அவர் எதிர் பார்க்கவில்லை. அதாவது வடமாகாண மக்களால் பொருளாதார மையத்தை எங்கு நிறுவலாம் என்பதில் ஸ்திரமான நிலைப்பாடு ஒன்று இல்லாததால் அதனை மதவாச்சியில் அமைக்க வேண்டும் என்று கேட்டு நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் “வேறு விடயங்கள்” என்று தலைப்பின் கீழ் தமது கருத்தைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ரிஷாட் பதியுடீனும் ஒத்துப் போனார் போல் தெரிந்தது.

நான் விளக்கமளிக்கையில் பொருளாதார மையம் வவுனியாவில் நிறுவுவது சம்பந்தமாக எமக்கு அறிவிக்கப்பட்டதும் ஐந்து இடங்களை அடையாளம் கண்டு அவற்றில் எது சிறந்தது என்று நிபுணர்கள் குழு ஒன்றை அமைத்துக் கேட்டோம். அவர்கள் தாண்டிக்குளத்திலும் மற்றைய மூன்று இடங்களிலும் அமைப்பது கூடாது என்றும் ஓமந்தையில் அமைப்பதே சிறந்தது என்றும் கருத்து வெளியிட்டார்கள். தாண்டிக்குளத்தில் அமைத்தால் எமது விவசாய கல்லூரியும் விவசாயப் பண்ணையும் பாதிக்கப்படுவன என்று கூறினார்கள். வேறு பல காரணங்களையும் முன்வைத்தார்கள். எனவே நான் ஓமந்தையில் நிறுவுமாறு அமைச்சரிடம் கேட்டிருந்தேன். அதன் பின் நான் பங்குபற்றாமல் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கௌரவ ரிஷாட் பதியுதீன் தாண்டிக் குளத்தில் நிறுவ வேண்டும் என்று கூறி முடிவு எடுக்க வைத்தார். இந்தப் பிரச்சினையைத் தொடக்கி விட்டவரே அவர் தான்.

இது பிரச்சினையாகியவுடன் பொருளாதார மையத்தை இழக்கக் கூடாதென்ற காரணத்தினால் நான் அமைச்சர் ஹரிசனைப் போய் நேரில் சந்தித்தேன். அவர் தாண்டிக்குளமும் ஓமந்தையும் தூரமாய்ப் போய்விட்டன. வவுனியா நகரத்தினுள் ஒரு இடந் தரவேண்டும் என்று கேட்டார். வடக்கு நோக்கி அமைதலே உசிதம் இது வடக்குக்குக் கிடைக்க வேண்டிய மையம். எனவே மாங்குளத்தில் அமைப்பதே சிறந்தது. அப்படி இல்லை என்றால் வவுனியாவின் வடக்கில் இருக்கும் ஓமந்தையே சிறந்தது என்று கூறிப்பார்த்தேன். அமைச்சர் ஒரேயடியாக நகரத்தினுள் இடந் தாருங்கள் என்று விடாப்பிடியாகக் கேட்டார். எனவே ஒரு வாரத்தினுள் நான் அவர் கேட்டவாறு யு9 பாதையில் ஊவுடீ பஸ்நிலையத்திற்குப் பின்புறமாக மதவுவைத்த குளத்தில் ஐந்து ஏக்கர் காணிகளை அடையாளங் காட்டினேன். அது திரு.ரிஷாட் பதியுடீன் அமைச்சராக இருந்த காலத்தில் அவரின் கோரிக்கைக்கு அமைய ஒரு கம்பனிக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

மதவாச்சிக்கு கொண்டு செல்ல திட்டம்

நான் விசாரித்துப் பார்த்து அப்படியல்ல, குத்தகைக்கு எடுப்பதாக இருந்த கம்பனி கூறப்பட்ட பூர்வாங்க நடவடிக்கைகளில் இறங்காமையால் இரண்டு வருடங்கள் சென்ற நிலையில் காணியைத் திரும்பப் பெறுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை அவருக்கு எடுத்துரைத்தேன். இது பற்றிய காணி ஆணையாளரின் கடிதமும் கையளிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அன்று காலை அமைச்சர் கூட்டத்திற்கு முன்னர் அவர் என்னைச் சந்தித்து அவ்விடம் குத்தகைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். எந்தவித குத்தகையும் கைச்சாத்திடப்படவில்லை என்று கூறினேன். அதை அவர் ஏற்கவில்லை. பின்னர் கூட்டத்தில் அவரின் கூற்றின் போது பதில் அளிக்கையில் எம்மைப் பயப்படுத்திக் காரியம் சாதிக்கப் பார்க்கின்றார் அமைச்சர் என்று கூறி வடமாகாணத்திற்கு எப்படி என்றாலும் பொருளாதார மையத்தைத் தர வேண்டும் என்று கூறி நிபுணர்கள் கூடாது என்று கூறியிருப்பினும் கட்டாயத்தின் பேரில் வேண்டுமானால் தாண்டிக் குளத்தில் அமையுங்கள் என்றேன். முழு அமைச்சர் குழாமிற்குங் கேட்கும் படியாக பொருளாதார மையம் வடமாகாணத்திற்கு அவசியம் என்பதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றேன்.

மத்திய அமைச்சர் மதவாச்சிக்குக் கொண்டு போக ஆவணம் சமர்ப்பித்துள்ளார் என்பதை அமைச்சர் ரிஷாட் அறிந்து கூட மதவாச்சிக்கு எடுத்துச் செல்லும் திரு.ஹரிசனை விமர்சிக்காமல் தாண்டிக்குளத்திற்கு எடுத்துச் செல்ல முதலமைச்சர் இணங்கியுள்ளார் என்று ஜனாதிபதிக்குக் கூறினார். தாண்டிக்குளத்தில் அமைக்கத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியோ சிரித்துக் கொண்டு இல்லை! இதை பிரதம மந்திரியுடன் பேசி சுமூகமான ஒரு முடிவுக்கு வாருங்கள் என்றார். அமைச்சர் ரிஷாட்டுக்கு தாண்டிக்குளத்தில் அமைப்பதால் எமக்கு ஏற்படப் போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. விவசாகக்கல்லூரி, விவசாய நிலம், விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் பெரிதாகப்படவில்லை. ஆகவே தமிழ் மக்களுக்கு வரவேண்டிய, வரக்கூடிய பல திட்ட அமைவுகளையும் சூறையாட நடவடிக்கைகள் திரை மறைவுகளில் நடக்கின்றன என்பதை உங்கள் கூட்டத்தை மையமாக வைத்து இங்கு வெளிப்படுத்துகின்றேன். இந்தச் சூழ்நிலையில் எமது கொடையாளர்களின் பரோபகாரம் உச்ச முக்கியத்துவத்தை அடைகின்றது. “எமக்கு நாமே” என்ற ஸ்லோகம் இவற்றினால் வலுவடைகின்றது.

எனவே எமது மாகாண முதலீட்டாளர்களும், தொழில் உரிமையாளர்களும் கூடுதலான தொழில்வளங்களை இப் பகுதிகளில் உருவாக்க முன்வரவேண்டும். அதன்மூலம் வடபகுதியைச் சேர்ந்த மக்கள் தொழில் வளங்களைப் பெற்று உழைப்பால் உயர்ந்தவர்கள் என்ற பெருமையை தேடிக்கொள்ளவேண்டும் என வாழ்த்தி விடைபெறுகின்றேன்.”
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila