சீன நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு அனுமதிக்குமாறு சீனா விடுத்த வேண்டுகோளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை மாலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய சற்று நேரத்தில், இந்தச் செய்தியை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இதையடுத்து, சர்வதேச ஊடகங்களில் இதுவே பிரதான செய்தியாக மாறியிருந்தது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து வருகின்ற பூகோள அரசியல் போட்டியே இந்தப் பரபரப்புக்கு முக்கிய காரணம்.
மே 14ஆம் திகதியும், மே 15ஆம் திகதியும் சீன நீர்மூழ்கி கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி கோரப்பட்டதாகவும், ஆனால் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதி காரி ஒருவரும் அரச அதிகாரி ஒருவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியாவின் கரிசனைகளை மீறும் வகையில், சீன நீர்மூழ்கிகள் கொழும்பில் தரித்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட வாய்ப்பில்லை என்று அரச அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே, 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கொழும்பு துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் மேற்கொண்டிருந்த பயணமே, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே ஆட்சிமாற்றத்தில் இந்தியாவின் பங்களிப்பும் இருந்தது.
அந்தச் சம்பவத்துக்குப் பின்னர், சீன நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் திடீரென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்புப் பயணத்தை அண்டியதாக, சீன நீர்மூழ்கி கொழும்புக்கு வருவதற்கு அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
2014ஆம் ஆண்டு, சீனாவுடன் எப்போதும் முரண்பட்டு வரும் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே கொழும்பு வந்திருந்த போது தான், சீன நீர்மூழ்கி கொழும்பு வந்திருந்தது. அந்த விவகாரம் அப்போது தீவிரமடைந்தமைக்கு அதுவும் ஒரு காரணம்.
அதுபோலவே, இந்தியப் பிரதமரின் வருகையை ஒட்டியதாக இப்போது சீன நீர்மூழ்கியின் பயணத் திட்டம் வகுக்கப்பட்டதும் கூட கூடுதல் சர்ச்சைகளுக்குக் காரணம் எனலாம்.
ஏனென்றால், இந்தியப் பிரதமர் இலங்கையில் மேற்கொண்டது ஒன்றும் திடீர் பயணமல்ல. கடந்த ஆண்டிலேயே திட்டமிடப்பட்டது. அவரது பயண நாட்கள் பற்றிய திகதிகள் கூட முன்னரே தெரிந்த ஒன்று தான்.
இதனை அண்டியதாக சீனா தனது நீர்மூழ்கியை கொழும்புக்கு அனுப்பத் திட்டமிட்டது சந்தேகங்களையே ஏற்படுத்தும். விநியோக உதவித் தேவைகளுக்காக நீர்மூழ்கியை கொழும்புக்கு அனுப்ப சீனா திட்டமிட்டிருக்கலாம் என்பது பொய்யான வாதம்.
ஏனென்றால், இந்தியப் பெருங்கடல் வழியாக சீனா தனது நீர்மூழ்கிகளை மாதம் தோறும் ஏடன் வளைகுடாவுக்கு அனுப்பி வருகிறது. இலங்கையைக் கடந்தே இந்த நீர்மூழ்கிகள் சென்று வந்திருக்கின்றன. ஆனாலும், ஆட்சி மாற் றம் ஏற்பட்ட பிறகு, சீனா தனது நீர்மூழ்கிகளையோ, கப்பல்களையோ கொழும்புக்கு அனுப்பவில்லை.
இந்தநிலையில் திடீரென இந்தியப் பிரதமரின் பயணத்தை ஒட்டியதாக சீனா தனது நீர்மூழ்கியை அனுப்பும் முயற்சிகளை எடுத்துள்ளது என்றால், அதில் விசமத்தனங்களும் நிறைந்திருக்கிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இலங்கைக்கு சீனா தனது நீர்மூழ்கியை 2014ஆம் ஆண்டு எந்த உள்நோக்கமும் இன்றி அனுப்பியதென்றால், ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஏன் அத்தகைய முயற்சிகளை மீண்டும் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.
அதேவேளை, சீன நீர்மூழ்கிக்கு கொழும்பில் தரித்துச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுத்திருக்கலாம். அதற்கான சந்தர்ப்பங்களும், வாய்ப்புகளும் அதிகம்.
சீன நீர்மூழ்கிகள் இலங்கையின் துறைமுகங்களை பயன்படுத்துவதை இந்தியா விரும்ப வில்லை. ஆனால் அதனை வெளிப்
படையாகக் கூற முடியாத நிலையில் இருக்கிறது. சந்தர்ப்பங்கள் கிடைக் கும் போது, இதுபோன்ற விடயங்களை இந்தியா இராஜதந்திர ரீதியாக கையாண்டு வந்திருக்கிறது.
மோடியின் கொழும்பு பயணத்தை ஒட்டியதாக இல்லாமல் சீன நீர்மூழ்கியின் வருகைக்கு அனுமதி கோரப்பட்டிருந்தால் இந்தியா சில வேளைகளில் மௌனமாக இருந்திருக்கலாம்.
2014ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கிகளின் வருகை தொடர்பாக இந்தியாவுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றே சீனாவும், மஹிந்த அரசாங்கமும் திட மாக வாதிட்டன. ஆனால் இந்தியாவோ அதனை மறுத்ததுடன், தன் மீதான அத்துமீறலாக, தனக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே பார்த்தது. மஹிந்த அரசாங்கத்துடன் இருந்த இடைவெளியால் இந்தியா அதனை பாரதூரமானதாக எடுத்துக் கொண்டது.
இந்த முறை சீன நீர்மூழ்கிக்கு அனு மதி மறுக்கப்பட்டதாகச் சொல்லப்படும் விடயத்தில், இந்தியாவை விட இலங்கையே கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஏனென்றால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்கு ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கும் காலத்திலேயே சீன நீர்மூழ்கிக்கு கொழும்பில் தரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவில் தங்கியிருக்கும் போது, சீன நீர்மூழ்கி கொழும்பில் தரித்திருந்தால், இரண்டு நாடுகளுக்கும் இடையில் நெருங்கிய கூட்டு ஏற்பட்டு விட்டதான தோற்றப்பாடு உருவாக்கப்படும்.
மோடியின் பயணத்திட்டத்தைக் குழப்புவது அல்லது அதற்கு இடையூறு ஏற்படுத்துவது கூட சீனாவின் திட்டமாக இருந்திருக்கலாம்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளப் போகும் நிலையில் தனது கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரிக்காது என்ற எதிர்பார்ப்பும் கூட சீனாவுக்கு இருந்திருக்கலாம்.
ஆனாலும், இந்தியப் பிரதமரின் பயணத்தைக் காரணம் காட்டி, இலங்கை அரசாங்கம் சீனாவின் வேண்டுகோளை நிராகரித்திருக்கிறது.
அதேவேளை, மே 14, 15ஆம் திகதிகளில் சீன நீர்மூழ்கி இலங்கை வருவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், அது நிரந்தரமான முடிவா என்பதில் கேள்விகள் உள்ளன. ரொய்ட்டஸ் செய்தி நிறுவனத்துக்கு தகவல் வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரே, இந்தப் பயணம் பின்னர் ஒருவேளை இடம்பெறலாம் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல சீன தூதரக வட்டாரங்களும், தமது கோரிக்கைக்கு இன்னமும் அரசாங்கத்திடம் இருந்து பதில் வரவில்லை என்றே கூறியுள்ளன. எனவே, மாற்று திகதிகளில் சீன நீர்மூழ்கியின் கொழும்புப் பயணம் இடம்பெறக் கூடும்.
இப்போது இந்தியப் பிரதமரின் வருகையைக் காரணம் காட்டி நிராகரித்தது போன்று இலங்கை அரசாங்கத்தினால் சீன நீர்மூழ்கிகளுக்கு தொடர்ச்சியான அனுமதி மறுக்க முடியாது. அவ்வாறு செய்வது சீனாவுடன் பெரியளவிலான பொருளாதார மற்றும் பிற ஒத்துழைப்புகள், உறவுகளை வைத்துள்ள இலங்கைக்கு பாதகமாகவே அமையும்.
2014ஆம் ஆண்டு சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை ஆட்சி மாற்றத்தில் குறிப்பிடத்தக்க காரணியாக இருந்த நிலையில், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சிங்கப்பூர் சென்றிருந்த போது, Straits Times நாளிதழ் ஒரு நேர்காணலை நடத்தியிருந்தது.
அதில் இந்தியாவை சினம்கொள்ள செய்த சீன நீர்மூழ்கி கப்பல்களின் பயணம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.
அதற்கு அவர், “இலங்கைக்கு வெளிநாட்டு கடற்படைக் கப்பல்கள் வருவதற்கான அளவுகோல் ஒன்றை நாங்கள் வகுத்துள்ளோம். அதனடிப்படையில் எந்த நாட்டினதும், நீர்மூழ்கிகள் உட்பட அனைத்து கடற்படைக் கப்பல்களும் இலங்கைக்கு வரலாம்.
நட்புறவுப் பயணமாக இருந்தால், நாங்கள் அயல்நாட்டிற்கு அது குறித்து அறிவிப்போம். குறிப்பிட்ட கப்பல்கள் இலங்கைக்கு தொடர்ச்சியாக, அடிக்கடி வராத வகையில் அட்டவணைகளை வகுப்போம்.
சீன நீர்மூழ்கிகள் இறுதியாக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட வேளை அது குறித்து தனக்கு தெரிவிக்கப்படவில்லை என இந்தியா தெரிவிக்கிறது, இதுவே பிரச்சினைக்குரிய விடயம். இது குறித்து ஆராய்ந்து பார்த்ததில் இது உண்மை என்றே தெரியவந்துள்ளது.
சீனா தனது நீர்மூழ்கிகளின் பயணத்தை முன்கூட்டியே இலங்கைக்கு தெரிவித்துள்ளது. அவர்களது நீர்மூழ்கிகள் கொழும்புத் துறைமுகத்திற்கு வந்து தரித்து விட்டு சென்று விட்டன.
ஜப்பானியப் பிரதமர் பயணம் மேற்கொண்ட வேளை இந்த சம்பவம் இடம்பெற்றது. எனவே அது பிரச்சினையாக மாறியது.
தற்போது நாங்கள் எங்கள் அளவுகோல்களின் அடிப்படையில் செயற்படுவோம். நீங்கள் உங்கள் நீர்மூழ்கிகளையும் போர்க்கப்பல்களையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டும், சிங்கப்பூரிடம் சிறந்த போர்க்கப்பல்கள் உள்ளன.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதாவது சீன நீர்மூழ்கிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு எந்த தடைகளும் இல்லை. இந்தியாவுக்குத் தெரியப்படுத்தி விட்டு வரலாம், ஆனால் அடிக்கடி வரக் கூடாது என்ற தொனியில் அவரது அந்தக் கருத்து அமைந்திருந்தது.
ஆனால், அந்தக் கருத்துக்கு மாறான வகையில், சீன நீர்மூழ்கிக்கான பயணத்துக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்திருக்கிறது. கொள்கை அளவிலான நிரந்தர முடிவாக இது இருக்குமேயானால், அது இலங்கை- சீன உறவுகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
எனவே தான் வேறொரு நாளில் சீன நீர்மூழ்கிக்கு அனுமதி கொடுக்க அரசாங்கம் திட்டமிடலாம். ஆனால் அதனை இந்தியா எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்பது முக்கியமான கேள்வி.
இலங்கையில் சீனாவின் ஒவ்வொரு நகர்வையும் எரிச்சலுடன் பார்க்கும் இந்தியாவுக்கு சீன நீர்மூழ்கிகள் மீண்டும் கொழும்பு வருவது ஒருபோதும் இனிப்பான செய்தியாக இருக்க முடியாது.
அதேவேளை, தனது பொருளாதார அபிவிருத்திக்காக சீனாவின் மீது தங்கியிருக்க வேண்டிய நிலையில் உள்ள இலங்கையைப் பொறுத்தவரையில் சீனாவின் எல்லாக் கோரிக்கைகளையும் உதாசீனம் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால் அந்தக் கூட்டு பலவீனப்பட்டு விடும்.
இந்த நிலையில் மஹிந்த அரசாங்கத்துக்கு சீன நீர்மூழ்கிகள் எவ்வாறு தலைவலியான விடயமாக மாறியதோ, தற்போதைய அரசுக்கும் அதுவே பெருந்தொல்லையாக மாறியிருக்கிறது.