மரண வீட்டில் மலர் மாலை போட்டு வரவேற்கமாட்டார்கள்

மரண வீட்டில் மலர் மாலை போட்டு வரவேற்கமாட்டார்கள்: வடமாகாண எதிர்கட்சித் தலைவருக்கு சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு புனிதமான நிகழ்வு என கூறிக்கொண்டு தமக்கு முன்னுரிமை வழங்கப்படாமை குறித்து பேசிக்கொண்டிருக்கும் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு மரண வீட்டில் மலர் மாலை போட்டு வரவேற்கமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 123ஆவது அமர்வு இன்றைய தினம் செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் சி.தவராசா விசேட கவனயீர்ப்பு ஒன்றை சபைக்கு கொண்டு வந்து உரையாற்றியிருந்தார்.
மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவர் தவராசா குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடமாகாணசபை நடத்துவதாக கூறி எங்களிடம் நிதி பங்களிப்பு கேட்கப்பட்டது. அதனால் நானும் 7 ஆயிரம் ரூபாவை வழங்கியிருந்தேன்.
ஆனால் நினைவேந்தலை வடமாகாணசபை நடத்தியதாக தெரியவில்லை. அங்கே கறுப்பு உடையணிந்த சிலர் நடத்துவதாகவே தெரிந்தது. ஆகவே வடமாகாணசபை நடத்தாத ஒரு நிகழ்வுக்காக பணம் கொடுக்க இயலாது, ஆகவே எனது பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தயவு செய்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து இப்படி பேசாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், எதிர்கட்சித் தலைவர் கேட்பதில் நியாயம் உள்ளது, ஆனால் நினைவேந்தலுக்கான சகல ஒழுங்குகளையும் வடமாகாணசபையே செய்திருந்தது.
ஆனால் இடையில் சில குழப்பங்கள் நடந்திருக்கின்றன, எனினும் நினைவேந்தலின் தாற்பரியம் காரணமாக நாங்கள் அந்த இடத்தில் அமைதியாக இருந்தோம் என குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் குறிப்பிடுகையில்,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒரு புனிதமான நிகழ்வு ஆனால் நினைவேந்தல் குறித்த பேச்சில் ஒரு மாதிரியாகவும் நினைவேந்தல் நடந்தபோது நடத்தையில் வேறு ஒரு மாதிரியாகவும் இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது என குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன்,
மாகாணசபை நிகழ்வை ஒழுங்கமைத்திருந்தால் ஒழுங்குகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில்,
18ஆம் திகதி காலை 10 மணிவரையில் ஒழுங்குகள் எல்லாம் ஒழுங்காகவே இருந்தன. ஆனால் நிகழ்வின் தொகுப்பாளர் வருவதற்கு சற்று தாமதமானதால் ஒலிவாங்கியை ஒருவர் எடுத்துக் கொண்டார். இன்னொருவர் பிரதான ஈகைச் சுடரை எடுத்துக் கொண்டார், இப்படி பல என தெரிவித்தார்.
தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கருத்து கூறுகையில், உண்டியலில் போட்ட பணமாக நினைத்து எதிர்கட்சி தலைவர் இதனை மறக்கவேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கருத்து கூறுகையில்,
மரண வீட்டில் மலர்மாலை அணிவித்து எங்களை அழைத்து செல்வார்கள் என எதிர்பார்க்க இயலாது. நினைவேந்தலின் தாற்பரியத்தை உணர்ந்து பேசுங்கள்.
எதிர்கட்சி தலைவர் கொடுத்த பணத்திலும்தான் எவருக்கும் முள் குத்தாமல் நிலம் துப்புரவாக்கப்பட்டது. தண்ணீர் கொடுக்கப்பட்டது என குறிப்பிட்டார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila