60 லட்சம் ரூபா வடக்கு ஆளுநருக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டது? சபை உறுப்பினர்கள் கேள்வி

வடமாகாண சபை த.தே. கூட்டமைப்பினால் பொறுப்பேற்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் மாவட்டங்கள் தோறும் வைத்திருந்த ஆணையாளர்களை அல்லது ஆளுநரின் இணைப்பாளர்களை முதலமைச்சரின் இணைப்பாளர்களாக மாற்றுங்கள், இல்லாவிட்டால் ஆளுநருக்கான நிதி ஒதுக்கீட்டினை முழுமையாக எதிர்ப்போம் என சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பில் குழுநிலை விவாதம் இடம்பெற விருந்த நிலையில் ஆளுநரின் செயலாளர் சபையில் இருக்கவில்லை
எனவே செயலாளர்கள் சபையில் இல்லாமல் குழுநிலை விவாதம் சாத்தியமற்றது என எதிர்க்கட்சியினரும், ஆளும் கட்சி யினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் சபைக்கு அழைக்கப்பட்டு பின்னர் விடயம் குழுநிலை விவாதத்திற்கு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் ஆளுநர் செயலகத்தின் கீழ் உள்ள ஆளுநர் பங்களாக்கள் எத்தனை? ஊழியர்கள் எத்தனை? என ஆளுநரின் செயலாளரிடம் சபையில் கேள்வி எழுப்பப்பட்டு செயலாளர் பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்பட்ட ஆளணி 95 உள்ளதாகவும், மேலம் சில தகவல்களையும் சபைக்கு சமர்ப்பித்தார். செயலாளரின் பதிலை தொடர்ந்து மீள கேள்வி எழுப்பிய முதலமைச்சர் குறித்த ஆளணி வடமாகாண சபை அமைக்கப்படுவதற்கு முன்னதாகவே இருந்ததா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆம் என செயலாளர் பதிலளித்தார். இதனை தொடர்ந்து ஆளுநருக்கு எத்தனை பங்களாக்கள் உள்ளன? என கூட்டமைப்பின் உறுப்பினர் செயலாளரிடம் வினவினார்.
அதற்கு இரு பங்களாக்கள் இருக்கின்றன. அவை ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டவை என செயலாளர் பதிலளித்தார்.
இதனை தொடர்ந்து சபையில் செயலாளர் மீது கேள்வி கேட்க முடியாதென, அவைத்தலைவர் அறிவுறுத்தியதை தொடர்ந்து குழுநிலை விவாதம் தொடர்ந்தது.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் க.சர்வேஷ்வரன் தமிழகத்தில் உள்ள ஆளுநர் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக ஒன்றை மட்டுமே வைத்திருக்கின்றார்.
ஆனால் வடக்கில் ஆளுநருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பங்களாக்கள் உள்ளன. இவை எதற்காக? என கேள்வி எழுப்பியதுடன், வரவுசெலவு திட்டத்தின் நிதி போதாதென நாம் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் மாவட்டங்கள் தோறும் ஆளுநர் தனது ஆணையாளர்களை நியமிப்பதற்கும், பங்காளக்களை பராமரிப்பதற்கும் நாங்கள் எவ்வாறு பணம் வழங்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.
அத்துடன், ஆளுநர் என்பவர் மக்கள் பிரதிநிதி அல்ல. அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரு உத்தியோகஸ்த்தர். ஆனால் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவு 60 லட்சம் ரூபா ஆளுநருக்கு எவ்வாறு ஒதுக்கப்பட்டது? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,
ஆளுநருக்கு நிதி வழங்குவதை நாங்கள் ஒத்துக்கொள்ளப் போவதில்லை. மேலும் ஆளுநருக்கு மாவட்டங்கள் தோறும் இணைப்பாளர்கள் அல்லது ஆணையாளர்கள் இருக்க முடியாது.
எனவே இந்த விடயத்தை சபையில் வாக்கெடுப்பிற்கு விடுங்கள் எனக்கோரிக்கை விடுத்தார்.
அதேபோன்ற கருத்தினை மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன், விந்தன் மேலும் கல்வியமைச்சர் த.குருகுலராஜா ஆகியோரும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியினையும், பிரமாண அடிப்படையிலான கொடுப்பனவுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். என சபையில் கடுமையான எதிர்ப்பு காட்டப்பட்டது.
இதனையடுத்து ஒரு மனதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் தாங்கள் கோரும் இரு திருத்தங்களுடன் குறித்த நிதி ஒதுக்கீட்டை தாம் அங்கீகரிப்பதாக சபைக்கு தெரிவித்தனர்.
அந்த திருத்தங்கள் என்னவென்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்படும் 60லட்சம் ரூபா நிதி ஆளுநருக்கு ஒதுக்கீடு செய்ய முடியாது. அது நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் ஆளுநரின் ஆளணிகள் 3 வகையாகின்றன அதாவது தனிப்பட்ட ஆளணி, அலுவலக ஆளணி மற்றும் ஆளுநரினால் 5 மாவட்டங்களில் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணையாளர்கள் என பிரிக்கப்படுகின்றது.
இதில் 5 மாவட்டங்களிலுமாக சுமார் 27 ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.ஆளுநர் அமைச்சர்களை மீறி ஆணையாளர்களை நியமித்து செயற்பட முடியாது.
அதிலும் குறிப்பாக வடமாகாண சபை அமைக்கப்பட்டதன் பின்னர் அவ்வாறு இயங்க முடியாது.
எனவே எம்.எஸ். டி (முகாமைத்துவ சேவை திணைக்களம்) அதனுடன் பேசி மற்றய மாகாணங்களில் ஆளுநருக்கு என்ன ஆளணி ஒதுக்கீடு உள்ளது என்பதை அறிவது,இந்த இரு திருத்தங்களும் செய்யப்பட்டால் சபையில் முழுமையான அங்கீகாரம் வழங்கப்படும் என திருத்தங்களுடன் குறித்த நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் இன்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் நேற்று விதிக்கப்பட்ட திருத்தங்களை செய்யாமல் ஆளுநருக்கு நிதி ஒதுக்க அங்கீகாரம் வழங்கப் போவதில்லை.
என உறுப்பினர்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்ந்தும் நிலுவையில் உள்ளது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila