பிணை வழங்கமுடியாத குற்றங்களை ஷிரந்தியும், மகன்களும் இழைத்துள்ளனர் ஜனாதிபதி மைத்திரி தெரிவிப்பு

4“ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது இரு மகன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பாரதூரமான விடயங்கள் தெரியவந்துள்ளன. அந்த குற்றங்களுக்குப் பிணைகூட வழங்க முடியாது” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யோஷித ராஜபக்ஷவின் கைது விவகாரம் தொடர்பாக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யோஷிதவை கைதுசெய்த நிதிக்குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவை கலைக்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்தக் கருத்தை அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்,
போக்குவரத்து அமைச்சர் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் ஆலோசிக்காமல் பகிரங்கமாக கருத்து வெளியிட்டமை தொடர்பில், சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். இதனால், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களிடையே வாக்குவாதம் மூண்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தைத் தடுப்பதற்காக தலையிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரிட்டனில் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு எவ்வாறு கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதை நினைவுபடுத்தியுள்ளதுடன், அமைச்சரவை ஒருவிடயம் குறித்து ஆராய்ந்து தீர்மானத்தை எடுத்ததும் அதனை கடைப்பிடிக்கவேண்டியது அமைச்சர்களின் கடமை. அதற்கு மாறான கருத்தை அவர்கள் தெரிவிக்க விரும்பினால் அவர்கள் தங்கள் பதவியை இராஜிநாமா செய்துவிட்டு தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிதிக்குற்றங்கள் தொடர்பிலான பொலிஸ் பிரிவின் விசாரணைகளில் ஆழமும் உண்மையும் உள்ளது. ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது இரு மகன்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பாரதூரமான விடயங்கள் தெரியவந்துள்ளன. அந்தக் குற்றங்களுக்குப் பிணைகூட வழங்கமுடியாது என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila