சமஸ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்துசெல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கனடாவில் கியூபெக் என்று பிரஞ்சு மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசம் உள்ளதாகவும் அவர்கள் கனடாவை விட்டு பிரிந்துசெல்லவில்லை என்றும் வாக்கெடுப்பிலும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமை நாட்டை துண்டாடும் செயல் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக் குறித்து வடக்கு முதல்வர் கருத்து வெளியிட்டுள்ளார்.
எங்கெல்லாம் சமஸ்டி உள்ளதோ அங்கெல்லாம் மக்கள் பிரிந்துசெல்லவில்லை என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்கொட்டலாந்து மற்றும் சுவிசலாந்து முதலிய நாடுகளிலும் இந்த முறை காணப்படுவதாக தெரிவித்தார்.
இலங்கையில் சிறுபான்மை இன மக்களுக்கு உரிமையை கொடுத்தால் பிரிந்துவிடுவார்கள் என்றொரு கருத்து உள்ளதாக கூறிய அவர் சிறுபான்மை மக்களின் உரிமையை கொடுத்துபர் பாருங்கள் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.


