மாணவிகள் மீது பாலியல் சேட்டை : பாடசாலையை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள பெரியபுலம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவிகளிடம், தகாத முறையில் நடந்துகொண்ட ஆசிரியர்களுக்கு எதிராக, குறித்த பாடசாலையின் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளை பகிஷ்கரித்து, இன்று (புதன்கிழமை) காலை முதல் பாடசாலைக்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருவதாக எமது பிராந்திய செய்திளார் தெரிவித்தார். மாணவிகள் மீது ஆசிரியர்கள் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டபோதும், அவர் அதனை மூடி மறைக்க முயன்றதாக மாணவர்களின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். நேற்று இது தொடர்பில் பாடசாலை அதிபருடன் பெற்றோர்கள் கலந்துரையாடியோது வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமென்றும், சம்பவத்தை மூடி மறைத்த அதிபரை பதவிநீக்கம் செய்யவேண்டுமெனவும் வலியுறுத்தி, மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதேசத்தில் அதிகளவு பொதுமக்களும் குவிந்துள்ளதால், கலகம் அடக்கும் பொலிஸாரும் தற்போது அங்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் வரணிப்பகுதியில் உள்ள ஓர் பாடசாலையிலும் இது போன்றதொரு சம்பவம் இடம்பெற்ற நிலையில், அப் பாடசாலையின் அதிபர் மற்றும் நான்கு ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add Comments


