வடக்கின் பொருளாதார மத்திய நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டாம்
வடக்கில் அமைக்கப்படவிருந்த விஷேட பொருளாதார மத்திய நிலையத்தை, காணிப்பிரச்சினைகளை காரணம் காட்டி வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளை, அரசாங்கம் கைவிடவேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வலியுறுத்தியுள்ளார். வடக்கிற்கான விசேட பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைப்பதற்கு ஐந்து இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதிலிருந்து ஒன்றை தெரிந்தெடுக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பில் உரையாற்றியபோதே, கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஆட்சிமாற்றத்தின் பின்னரும் தங்களது கோரிக்கைகளை, செவிமடுக்காமல் நல்லாட்சி அரசாங்கம் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். குறிப்பாக நீண்டகாலம் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், அமைக்கப்பட்ட விசேட நீதிமன்றத்தின் ஊடாக அரசியல் கைதிகளின் வழக்கு தொடர்ச்சியாகவே ஒத்திவைக்கப்பட்டுவரும் நிலையே ஏற்பட்டிருப்பதாகவும் கவலைத் தெரிவித்தார். மேலும் விசேட நீதிமன்றத்தின் மூலம் எத்தனை அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கேள்வியையும் சிவசக்தி ஆனந்தன் சபையில் எழுப்பினார்.
Add Comments


