என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் : ஜெனிவாவில் அனந்தி


யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு   முள்ளி வாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று  வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 



ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

2009 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது நான் முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்தேன். நான் இன்னும்    இலங்கை இராணுவத்தினால் பஸ்ஸில் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய  கணவரை தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஒரு அரசியல் தலைவர். 

ஐ.நா. மனித உரிமை ஆணைாயளரின் வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை எடுத்து கூறுகின்றது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் கைதியை மாத்திரம் விடுவித்துள்ளார். ஏனையவர்களை விடுவிக்கவில்லை.  காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அவரால் கூற முடியவில்லை.

வடக்கு, கிழக்கில் அதிகளவான பெண்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடிக் கொண்டு இருக்கின்றனர். எமது கருத்து என்னவெனில் முறையான சர்வதேச குற்றவியல் விசாரணையின்றி இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தை மாற்றியமைக்க முடியாது என்பதாகும்.  

சர்வதேச நீதியை தாமதப்படுத்துவதானது நீதியை மறுப்பதற்கு சமமாகும். ஜெனிவா செயற்பாடுகளுடாக சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களும் இதனை எதிர்பார்த்தனர். 

புலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை வரும் இளைஞர், யுவதிகள் இராணுவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனர் என்றார்.  
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila