சர்ச்சைக்குரிய நயினாதீவு விகாரையின் 67 அடி புத்தர் சிலை நிர்மாணப்பணிக்கு இலங்கை ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளமை இந்து அமைப்புக்களிடையே கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.
வடக்கில் இம்முறை வெசாக்தினம் பெரியளவில் கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நயினாதீவு நாகவிகாரைக்கு விஜயம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையிலேயே பின்னர் குறித்த விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த நயினாதீவு நாகவிகாரைக்கு அண்மையில் உள்ள கடற்கரையில் 67 அடி உயரமுள்ள புத்தர் சிலை அமைப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாகவும் இந்து அமைப்புக்களது கோரிக்கையினை முன்னிலைப்படுத்தியும் அவர் அப்பிரயாணத்தை தவிர்த்ததாக கூறப்பட்டது.
எனினும் அங்கு அடாவடியில் ஈடுபட்டுள்ள புத்த பிக்குவின் நெருக்கடிகளிற்கு அடிபணிந்து தற்போது அனுமதியை மைத்திரி வழங்கியுள்ளதாகவும் இது தொடர்பில் யாழ்.அரச அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் கரையோர பாதுகாப்பு திணைக்கள தடைகாரணமாக புத்தர்சிலை நிர்மாணப்பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. எனினும் தற்போது தடையை நீக்கி ஜனாதிபதி மைத்திரிபால சமிக்ஞை காட்டியுள்ள நிலையில் சிலை அமைக்கும் பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கடற்படையினர் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டு இராவு பகலாக நிர்மாணப்பணிகள் மேற்கொண்டு வருகின்றமை தொடர்பான படங்கள் பதிவிற்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளது.