உள்நாட்டு பொறிமுறையில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது ; சிவாஜிலிங்கம்


ஸ்ரீலங்காவின் உள்நாட்டு பொறிமுறை கட்ட மைப்பில் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதையே குமாரபுரம் படுகொலையின் தீர்ப்பு வெளிக்கொணர்ந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



குமாரபுரம் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள், பாதிக்கப்பட்ட மக்களினால் அடையாளம் காணப்பட்ட போதிலும்  குறித்த வழக்கு 7 ஜூரிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையினால், படுகொலையுடன் தொடர்புடைய 6 இராணுவத்தினரும் விடுதலை செய்யப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனை தெரிவித்தார்.

இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதாக  ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் உறுதியளித்திருந்தது.

எனினும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்க, மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை அழைக்கப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஜெனிவாவில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார்.

தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வோ, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியோ கிடைக்காத வரை நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila