பொறுப்புக்கூறலை தட்டிக் கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோரது உறவுகளின் வடக்கு- கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வெளியிடும் வகையில் வட. மாகாண சபையில் முதலமைச்சர் இன்று (வியாழக்கிழமை) ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த பல நாட்களாக காணாமலாக்கப்பட்ட உறவுகள் குறித்தும், இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்தமை பற்றியும் இம்மக்கள் தமது வருத்தங்களையும் கரிசனைகளையும் தொடர்ச்சியான போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுமார் 50 நாட்களையும் கடந்து இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இது குறித்து அரசாங்க தரப்பில் எவ்வித ஆறுதல் வார்த்தைகளும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படாமை வருத்தமளிக்கிறது.
இவ்வாறாக தமது போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் எட்டப்படாத நிலையில், நீதிக்கான ஒரு காத்திரமான ஜனநாயக செயற்பாடு என்ற முறையில் மக்கள் அணிதிரண்டு ஹர்த்தாலில் ஈடுபட்டுள்ளனர்.
தீர்வு காண்பதற்கு அரசாங்கம் தாமதிப்பதே இன்றைய வடக்கு கிழக்கு ரீதியான போராட்டத்தின் அடிப்படைக் காரணமாகும். பொறுப்புக் கூறலை நாம் தட்டிக்கழித்து வருவதால் மக்களின் மனவருத்தங்கள் மேலும் உக்கிரமடையும் என்பதற்கு இன்றைய பூரண ஹர்த்தால் ஒரு சிறந்த உதாரணமாகும்” எனவும் குறிப்பிட்டார்.