யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கும் இடையில் பணி நிமித்தம் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் மதுபானம் அருந்துவதற்காக இருவரும் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்றிருந்த இருவரும் தற்செயலாக சந்தித்த போது, அவர்களுக்குள் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
வாய்த்தர்க்கம் முற்றியதால், பொலிஸ் அதிகாரியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கியுள்ளார். இவ்வாறு இருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
குறித்த விருந்தினர் விடுதியின் முகாமையாளர் இருவரையும் தடுத்து பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி யாழ். பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியிடம் தெரிவித்துள்ளதுடன், குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யுமாறும் தெரிவித்தமைக்கு ஏற்ப குறித்த பொலிஸ் அதிகாரி சக உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.