அமைச்சர்கள் இருவரையும் பதவி விலக வலியுறுத்தினார் வடக்கு முதல்வர்! (இணைப்பு 4)

breaking

வடக்கு மாகாண அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராஜா ஆகியோர் தாமாக பதவி விலகவேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பிலான விசேட அமர்வு நடைபெற்றுள்ள நிலையில்,
முன்னதாக விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கத்தை வழங்கினார். தேனீர் இடைவெளியின் பின்னர் மீண்டும் கூடிய சபை அமர்வில் உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கோரிக்கை முன்வைத்ததை அடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன், விசாரணைக்குழு அறிக்கை சரியா? தவறா? என்று கூற முடியாது என்றும் இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமையால் அமைச்சர்கள் இருவரும் தாமாக முன்வந்து பதவி விலகவேண்டும் எனக் கோரிக்கைவிடுத்திருக்கிறார். அவர்கள் இருவரும் நாளை மதியத்திற்கு இடையில் பதவி விலகல் கடிதங்களை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
அதேவேளை அமைச்சர்கள் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோரை கட்டாய விடுப்பில் செல்லுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார். அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மீளவும் விசாரிக்க மற்றொரு குழுவை நியமிக்கவுள்ளதாகவும் தெரிவித்த அவர், சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் ஆகிய அமைச்சர்களது அதிகாரங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்திருக்கின்றார்.
அவர்கள் மீதான விசாரணைகள் மூலம் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் இருவரும் பதவி இழுக்க நேரிடும் என்றும் அறிவித்துள்ளார்.
இதனிடையே சபையில் இருந்து எதிர்க்கட்சியினர், மற்றும் தமிழரசுக்கட்சியினர் வெளிநடப்புச் செய்த நிலையிலேயே இந்த அறிவிப்பும் முதலமைச்சரால் வெளியிடப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 22ஆம் திகதிக்கு சபை ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila