உத்தேச அரசமைப்புத் திட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டால் தாங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிப்போம்.
அத்தகைய காலகட்டத்தில் இந்த விடயத்தில் தாங்கள் பொது எதிரணியான மஹிந்த அணிக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருசாரார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் கடந்த அரசமைப்புக் குழுக் கூட்டத்தின் போது சிங்களத்தில் 'ஏகிய' எனக் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தையை ஆங்கிலத்தில் 'ஐக்கிய' எனக் குறிப்பிடப்படுவதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழுவினர் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் உடன்பாடு காணப்படவில்லை.
அண்மையில் நாடாளுமன்றத்தில் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர் இந்த அரசு தொடர்ந்து 5 வருடங்கள் பதவியில் இருக்கவேண்டுமென கருத்துத் தெரிவித்தபோது ஒருசாரார் அதற்கு எதிரான கருத்தைத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், இந்த அரசுடன் தொடர்ந்து 5 வருடங்கள் இருந்தால் அடுத்த தேர்தலில் தாங்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்படுவோம் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
மேலும், இந்த வருட வரவு செலவுத்திட்டத்தின் பின் அரசில் பாரிய மாற்றமொன்று வரும் எனவும் அவர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.