யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்த அதே கருத்தினை சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் வழிமொழிந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாறையிலும் கண்டியிலும் இடம்பெற்றுவருகின்ற வன்முறைகளின் தொடராக முஸ்லிம்மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்,
”ஆயுதப் போராட்டத்தின் போது நாம் முஸ்லிம்களுக்கு எதிராக கொடுமைகளை இழைத்துள்ளோம் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது 1990 முஸ்லிம்களை வெளியேற்றியது இனச் சுத்திகரிப்பு (ethnic cleansing) தான். இல்லை என்போர் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை (genocide) என கூறும் யோக்கிதை அற்றவர்கள் என்பது எனது தாழ்மையான கருத்து” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்தினையே சுமந்திரன் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ்த் தேசிய வாதிகள் உடனடியாகவே எதிர்வினையாற்றிருந்தனர்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என குமாரவடிவேல் குருபரன் வலியுறுத்தித் தெரிவித்திருக்கின்ற கருத்துத் தொடர்பில் ஒரு நாடு இரு தேசம் என்ற தாரக மந்திரத்தினை பிரதான அரசியல் கொள்கையாக வைத்திருக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ, நல்லாட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து செயற்பட்டுவருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ மறுப்புக் கருத்து எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொழும்பு ஊடகத்திற்கு தெரிவித்திருந்த செய்தியின் இணைப்பு வருமாறு :
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச் சுத்திகரிப்பே ஆகும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றியமையை, இனப் பாதுகாப்பு எனக் கூறுவது, அவர்களை மேலும் அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையானது இனப்பாதுகாப்பு என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஆகியோர் தெரிவித்த கூற்றுக்களுக்கு மறுதலிக்கும் வகையில், நேற்று திங்கட்கிழமை, தமிழ்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ‘யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள், இனச்சுத்திகரிப்பு செய்யவில்லை, மாறாக இனப் பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக, எந்தத் தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள் எனக்கூறுவது, ஏற்றுக்கொள்ள முடியாத விடயமொன்றாகும்.
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது, சட்ட வரைவிலக்கணத்துக்கமைய, இனச்சுத்திகரிப்பே ஆகும். அதில், எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை. இனச் சுத்திகரிப்புக்கென ஒரு சட்ட வரைவிலக்கணம் உள்ளது. அதாவது, ஓர் இனத்தை, ஓர் இடத்திலிருந்து முற்றாக வெளியேற்றினால் அது, இனச் சுத்திகரிப்பாகும். அதற்கமைவாகவே நான், இந்தக் கருத்தை முன்வைத்தேன்’ என்றார்.
மேலும், ‘இந்தக் கருத்து, நான் இப்போது கூறியது அல்ல. மாறாக, 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டமொன்றிலும், யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனச்சுத்திகரிப்பே ஆகும் எனக் கூறியிருந்தேன். அந்தக் கூட்டத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனும் பிரசன்னமாகியிருந்தார். அப்போது நான் கூறிய கருத்துத் தொடர்பில் அவர், மறுதலிப்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை. தற்போது நான் முன்வைத்த கருத்தை அவர், எவ்வாறு மறுதலிக்க முடியும்?
யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்றியமையானது இனப்பாதுகாப்பு எனக் கூறுவது நகைப்புக்குரிய விடயமாகும்.பலவந்தமாக ஓர் இனத்தை ஒரு பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எவ்வாறு இனப்பாதுகாப்பு எனக் கூறுவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முஸ்லிம்கள் எவ்வாறு காட்டிக்கொடுத்தார்கள் என இலங்கை படைத்துறையின் அதி உயர் அதிகாரி வாக்குமூலம் ஒன்றை வழங்கியிருந்தார். குறித்த செய்திகள் சில நாட்களின் முன்னர் ஊடகங்களில் பிரதான பங்குவகித்திருந்தன. அந்தச் செய்தியின் இணைப்பு கீழே இணைக்கப்படுகிறது: