காகிதாதிகளின் விலை நாளுக்கு நாள் எகிறிய வண்ணமுள்ளது. அதிலும் குறிப்பாக பத்திரிகை அச்சிடும் தாள்களின் விலை கண்ட பாட்டில் உயர்ந்து கொண்டிருக்கிறது.
எனினும் இது குறித்துப் பலரும் மெளன மாக இருக்கின்றனர். ஊருக்குச் சாத்திரம் சொன்ன பல்லி கஞ்சிப் பானைக்குள் விழுந்து இறந்த கதையாகத்தான் எங்கள் நாட்டுப் பத் திரிகைகளின் போக்கும் இருக்கிறது.
அதாவது எல்லாவற்றுக்கும் குரல் கொடுப் பதும் செய்தி எழுதுவதும் என்ற பணியைச் செய்கின்ற பத்திரிகைகள்; பத்திரிகைத்தாள் களின் விலையேற்றம் தொடர்பில் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவோ அன்றி ஜனாதிபதி அல்லது பிரதமரைச் சந்தித்து பத்திரிகைகளின் விலை யேற்றம் குறித்து முறையிடவோ இல்லை.
இதனைப் பத்திரிகைகள்தான் செய்ய வில்லை என்றால், பாராளுமன்ற உறுப்பினர் கள், அச்சக அமைப்புக்களின் ஒன்றியங்கள், பத்திரிகை ஆசிரியர் சங்கங்களாவது இது பற் றிக் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
பத்திரிகைத்தாள் விலையேறினால், பத்திரி கையின் விற்பனை விலையை அதிகரிப்பது என்ற முடிவை எடுப்பதுதானே! இதுபற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் எனப் பத்திரிகை சார்ந்த எவர் நினைத்தாலும் அது மிகப்பெரும் தவறாகும்.
ஏனெனில், பத்திரிகைகளின் விற்பனை விலைகளை உயர்த்தும்போது விலைச் சுமை காரணமாக பத்திரிகைகளை வாங்குவதில் இருந்து பொதுமக்கள் விலகிக் கொள்வர்.
இஃது வாசிப்புப் பழக்கத்தில் மிக மோசமான எதிர்விளைவை ஏற்படுத்தும். இது தவிர, பத் திரிகைத் தாள்களின் விலையேற்றத்தால் கடு மையாகப் பாதிக்கப்படப் போவது பிராந்தியப் பத்திரிகைகள் என்பது வெளிப்படையான உண்மை.
பொதுவில் தென்பகுதியில் இருந்து வெளி வரும் பத்திரிகைகள் பத்திரிகைத் தாள்களின் விலைச்சுமையை விளம்பரக் கட்டணங்களி னூடாக நிவர்த்திக்க முற்படும். ஆனால் அதனைப் பிராந்திய பத்திரிகைகளால் செய்ய முடியாது.
இங்குதான் பத்திரிகைத்தாள்களின் விலை யேற்றம் குறித்து தேசியப் பத்திரிகைகள் கவ னம் கொள்ளாமல் இருப்பது பலத்த சந்தேகங் களை ஏற்படுத்தி நிற்கின்றது.
அதாவது, இலங்கையில் தினசரி வெளி வருகின்ற பிராந்தியப் பத்திரிகைகள் என்பது வடபுலத்தில் மட்டுமே உள்ளன.
எனவே பத்திரிகைத் தாள்களின் விலை யைக் கடுமையாக ஏற்றம் செய்வதனூடு, வட புலத்து தமிழ்ப் பத்திரிகைகளை நலிவடையச் செய்யலாம் என்ற உள்நோக்கம் உண்டா? என்று எண்ணத் தோன்றுவதில் தவறில்லை.
மூன்று நான்கு மாதங்களுக்குள் ஒரு கிலோ பத்திரிகைத்தாள் எழுபது ரூபாயால் அதிகரித் துள்ளதெனில், இதன் பின்னணி என்ன? என்பதைத் தமிழ்ப் பத்திரிகைகளேனும் சிந்திப் பது கட்டாயமானது.
வெளிநாடுகளில் பத்திரிகைத் தாள்களின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்றால், வரி விலக்குகள் வழங்கியேனும் பத்திரிகைத்தாள் கள் விலையேறாமல் பாதுகாப்பது அரசின் கடமை என்பதை பாராளுமன்றத்தில் எடுத்துரைப் பதற்குக் கூட நம்மிடம் எவரும் இல்லை என் றானபோது, நாம் என்னதான் செய்ய முடியும்.